புடவைக்கு மேலே கோட் எங்கே? ஆசிரியைக்கு "டார்ச்சர்".. துணிச்சலாக எடுத்த முடிவு! கேரளாவிலா இப்படி?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆசிரியைகள் கட்டாயம் அவர்கள் அணிந்திருக்கும் உடைக்கு மேல் ஓவர்கோட் அணிய வேண்டும் என்கிற விதி ஒரு சில தனியார் பள்ளியில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த விதியை பின்பற்ற ஆசிரியையிடம் பள்ளி நிர்வாகம் கடுமையாக வற்புறுத்தியுள்ளதால், தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார் பள்ளி ஆசிரியை ஒருவர்.
ஏன் ஆசிரியைகளுக்கு மட்டும் இந்த உடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது இந்த செய்தி கேரளா முழுவதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.

ஆடை கட்டுப்பாடு
ஆண்/பெண் என இருபாலரும் தங்களுக்கு எந்த உடை அணிய வேண்டுமோ அதனை அணிவதற்கான உரிமை நமது நாட்டில் இருக்கிறது. ஈரான், அரபு நாடுகளை போல பெண்களுக்கென ஆடை கட்டுப்பாடு நமது நாட்டில் சட்ட ரீதியில் கிடையாது. ஆனால் இந்த சுதந்திரம் கல்வி நிலையங்களில் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மிகச் சரியாக சொல்வதெனில் தனியார் நிறுவனங்களில் இந்த சுதந்திரம் அப்பட்டமாக மீறப்படுகிறது. பல நிறுவனங்கள் ஆண்களுக்கு ஒருவித கட்டுப்பாட்டையும், பெண்களுக்கு ஒருவித கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன.

ஓவர்கோட்
இது அப்பட்டமான பாலின பாகுபாடு என்பது தெரிந்தும் இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில், கேரளாவில் இயங்கி வரும் தனியார் உயர்நிலை பள்ளியில் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஆசிரியை ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பள்ளியில் ஆசிரியைகள் (ஆசிரியர்கள் அல்ல) தாங்கள் அணிந்திருக்கும் புடவை, சுடிதார் உள்ளிட்ட ஆடைகள் மீது கட்டாயம் ஓவர்கோட் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

பள்ளி நிர்வாகம்
இந்த பள்ளியில் ராணி எனும் ஆசிரியை பள்ளியில் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளார். சேரும்போது அவர் ஓவர்கோட் தைக்க அளவுகளை கொடுத்துள்ளார். ஒரு சில நாட்களில் ஓவர்கோட் கிடைத்துள்ளது. ஆனால், அது சரியாக தைக்கப்படவில்லை. எனவே அதை மறுபடியும் சரி செய்து கொடுக்கக்கூறி டெய்லரிடம் கொடுத்துள்ளார். எனவே ஓவர்கோட் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். ஏற்கெனவே ஓவர்கோட் கட்டாயம் என சொல்லப்பட்ட நிலையில் ராணி மட்டும் ஓவர்கோட் இல்லாமல் பாடம் நடத்துவதை பள்ளி நிர்வாகம் கண்டித்திருக்கிறது.

ராஜினாமா
இதனையடுத்து பள்ளியின் முதல்வர் திடீரென ஒருநாள் ராணி ஆசிரியரை மாணவர்கள் முன்னிலையில் ஓவர்கோட் அணியாதது குறித்து கடுமையான வார்த்தைகளில் பேசியிருக்கிறார். இது குறித்து ராணி கூறுகையில், "நான் அன்று புடவை அணிந்திருந்தேன். ஆனால் நான் என்னவோ அநாகரிகமாக உடை அணிந்திருந்ததைப்போல முதல்வர் என்னை கடுமையான வார்த்தைகளில் மாணவர்கள் முன்னிலையில் பேசிவிட்டார். உடை என்பது எனது அடிப்படை உரிமை.

பணியிட துன்புறுத்தல்
ஆசிரியைகளின் உடைகளை பார்த்து மாணவர்கள் சபலமடைகிறார்கள் எனில், மாற்ற வேண்டியது உடை அல்ல, மாணவர்களின் மன நிலையைதான். அதற்கான கல்வியைதான் மாற்ற வேண்டும். எனவே நான் அப்பணியிலிருந்து நின்றுவிட்டேன்" என்று கூறியுள்ளார். ராஜினாமா செய்த பிறகு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தைக்காக ராணியை சந்திக்க வந்துள்ளனர். ஆனால் இது பணியிட துன்புறுத்தல் எனவே இதில் சமாதானம் கிடையாது என்று ராணி தெளிவாக கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்த செய்தி கேரளா முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications