சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய நள்ளிரவு யாத்திரை வந்த 'புலி'- வீடியோ
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நள்ளிரவில் புலி உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சபரிமலையில் மண்டல, மகர பூஜைகளுக்காக பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது.
இந்த சீசனில் பொதுவாக சபரிமலை எங்கும் ஐயப்ப பக்தர்கள் நிறைந்து காணப்படுவர். கேரளாவின் எரிமேலி, நிலக்கல், பம்பை உள்ளிட்ட நகரங்கள் தூங்கா நகரங்களாக இருக்கும். எப்போதும் ஐயப்ப பக்தர்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இந்த சீசனில் எல்லாமுமே தலைகீழாகிவிட்டது. எரிமேலிக்கு கூட செல்லாமல் நேரே நிலக்கல் வந்து பம்பை செல்கின்றனர் பக்தர்கள். அதுவும் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் சபரிமலை ஐயப்பன் சந்நிதானம் வெறிச்சோடியே காணப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் நள்ளிரவில் புலி அல்லது சிறுத்தை ஒன்று நடமாடியிருப்பதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஐயப்பனின் வாகனமாக புலி வணங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அவர்களை தாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் பக்தர்கள் முன்வைத்துள்ளனர்.