மோடியை புகழ்ந்து தள்ளிய அப்துல்லாகுட்டி.. கட்சியை விட்டு அதிரடியாக தூக்கிய காங்கிரஸ்
திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசி வந்த ஏ.பி.அப்துல்லாகுட்டியை, காங்கிரஸ் கட்சி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சியை சேர்ந்த பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து வந்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து, அப்துல்லாகுட்டியை காங்கிரஸ் நீக்கியுள்ளது. இதனால் அப்துல்லாகுட்டி தனது ஆதரவாளர்களுடன், விரைவில் பாஜக-வில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அப்துல்லாகுட்டி. மக்களவை தேர்தலில் கடந்த முறை போலவே காங்கிரஸ் படு தோல்வியடைந்தது. இந்த சோகத்தில் இருந்து அக்கட்சி தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை யாருமே தற்போது வரை மீள முடியாமல் தவிக்கின்றனர்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் என்ற நிலை உருவான போது சோகத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அப்துல்லாகுட்டி மட்டும் தனித்து நின்றார். எப்படி என்றால் இவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மோடியை புகழ்ந்து தள்ளியிருந்தார்.
அப்துல்லாகுட்டி தனது பதிவில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, அவருடைய வழியில் ஆட்சி நடத்தியதால் தான் மோடியால் மீண்டும் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை பெற முடிந்ததாக கூறியிருந்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம் போன்றவை ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
நானும், அம்மாவும் இந்தியா திரும்பணும்.. அனுமதி கொடுங்க.. மோடிக்கு கடிதம் எழுதிய போலந்து சிறுமி
மக்களுக்காக வளர்ச்சி திட்டங்களை பார்த்து பார்த்து மோடி செய்கிறார். எனவே மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மோடியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிடைத் வெற்றி என புகழ்ந்து தள்ளியிருந்தார். தேர்தல் தோல்வியால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸார் விரக்தியடைந்திருந்த நிலையில், அப்துல்லா குட்டியின் இந்த ஃபேஸ்புக் பதிவு கட்சிமட்டத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து கட்சி தலைமை மோடியை புகழ்ந்தது குறித்து விளக்கம் கேட்டு அப்துல்லாகுட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அதிரடியாக இன்று அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளது.
அப்துல்லாகுட்டி மோடியை புகழ்ந்து கட்சியிலிருந்து நீக்கப்படுவது முதல் முறையல்ல. கடந்த 2009-ல் அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த சமயம், குஜராத் முதல்வராக மோடி இருந்தார். அப்போதும் இதே போல மோடியை புகழ்ந்து கருத்து தெரிவித்ததால் தான் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பின்னர் தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ ஆகியுள்ளார். தற்போது மீண்டும் மோடியை புகழ்ந்து காங்கிரஸால் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அப்துல்லாகுட்டி விரைவில் பாஜகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.