”யாதும் ஊரே யாவரும் கேளிர்” தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திருவனந்தபுரம்: தென் மாநிலங்கள் இடையே மொழி, கலாச்சாரம், பண்பாடு என நீண்ட வரலாறு அடிப்படையில் பல ஒற்றுமைகள் உள்ளதாகவும், மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் தென் மண்டல கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை வகித்த அமித் ஷாவுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்தார்.இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
அமித் ஷாவை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்! பக்கத்திலேயே 2 பேருக்கும் இருக்கைகள்! என்ன பேசினார்கள்?
ஜிஎஸ்டி
இதன்பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்கு பிறகு மாநிலங்களுக்கு நிதிசுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகைக்கான கால அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உளவுத்துறை
தொடர்ந்து தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தென் மாநிலங்களில் உளவுத்துறை இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் இணைந்து செயல்படவும் வலியுறுத்தினார்.
அமித் ஷாவிடம் கோரிக்கை
அதேபோல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை சிறப்பாக பராமரித்து வருகிறோம். மத்திய அமைச்சர் அமித் ஷா தலையிட்டு தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும். வெளிநாடுகளுடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள விதிகளை எளிதாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
திராவிட மொழிக் குடும்பம்
தொடர்ந்து, தென் மாநிலங்கள் இடையே மொழி, கலாச்சாரம், பண்பாடு என நீண்ட வரலாறு அடிப்படையில் பல ஒற்றுமைகள் உள்ளன. நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு எல்லா பிரச்னைகளையும் தீர்த்திட வேண்டும். அதனால் தென் மாநில முதலமைச்சர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.