வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம்? மாட்டுக்கறியை உள்ளே இழுத்து பாஜக தலைவர் சர்ச்சை.. யார் இவர்?
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 350யை கடந்துள்ளது. மேலும் 180க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். மேலும் ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் தான் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டது ஏன்? என்பதற்கு பாஜக மூத்த தலைவர் மாட்டிறைச்சியை இழுத்து கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் மலைக்கிராமங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைகளில் இருந்த பாறாங்கற்கள் மற்றும் காட்டாற்று வெள்ளம் ஆகியவை மக்கள் குடியிருக்கும் கிராமங்களை உருக்குலைத்தது.

மலைக்கிராமங்களான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 1000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலரும் நிலச்சரிவில் மண்ணில் புதைந்தனர். மேலும் ஏராளமானவர்கள் அந்த பகுதியில் ஓடும் சாலியார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்த பேரிடரால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளது. பச்சை பசேல் என காட்சியளித்த இந்த கிராமங்கள் தற்போது இடிந்து வீடு, பாறாங்கற்கள், மண் - கல் குவியல்களாக காட்சியளிக்கிறது. இன்று 5வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. ஏராளமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 355 பேர் வரை இதுவரை இறந்துள்ளனர். இன்னும் 180க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த துயரில் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அண்டை மாநில அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளை கேரளாவுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் தான் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு அங்கு பசுக்கள் வதைக்கப்படுவது தான் முக்கிய காரணம் என்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுமான கியான்தேவ் அஹுஜா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மாட்டிறைச்சி சர்வசாதாரணமாக ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் நிலையில் அவர் இப்படி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கியான்தேவ் அஹுஜா கூறியதாவது:
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு பசுவதை தான் நேரடி காரணம். கேரளாவில் பசுவதையை நிறுத்தாவிட்டால் இதுபோன்ற பேரிடர்கள் தொடரும். உதாரணமாக உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால் அங்கு இந்த அளவுக்கு பேரழிவு ஏற்படாது.
மாறாக பசுவதைக்கப்படும் இடங்களில் இதுபோன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன. கடந்த 2018 ம் ஆண்டு முதல் பசு வதையில் ஈடுபடும் பகுதிகளில் இத்தகைய சோகமான சம்பவங்கள் நடந்து வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். பசுவதையை நிறுத்தாவிட்டால் இதுபோன்ற பேரிடர்கள் கேரளாவில் தொடரும்'' என தெரிவித்துள்ளார். கியான்தேவ் அஹுஜாவின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications