கேரளா: 612 சிறுபான்மையின வேட்பாளர்களை நிறுத்தியும் 'சேட்டன்'களிடம் எடுபடாத பாஜக ராஜ தந்திரம்!
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தலில் இருபெரும் மலைகளாக இருக்கும் இடதுமுன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணியை வீழ்த்த இந்துத்துவா கடும் போக்கையே கைவிட்டுவிட்டு வழக்கத்துக்கு அதிகமாக சிறுபான்மையினரை வேட்பாளர்களாக நிறுத்தியும் பாஜகவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
கேரளாவிலும் தமிழகத்திலும் எப்படியாவது காலூன்றி விடுவதில் பகீரத பிரயத்தனத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது. கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரிகளின் முன்னணியோ காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணியோதான் தேர்தல்களில் வெல்ல முடியும் என்கிற நிலை தொடர்ந்து வருகிறது.
இடதுசாரிகள், பாஜக, காங் கட்சிகளை ஓரங்கட்டி விஸ்வரூபம் எடுத்த டிவென்டி 20 அமைப்பு.. எப்படி சாத்தியம்?
விதம் விதமான வியூகம்
இந்த ஸ்திரமான நிலையை உடைத்துப் பார்க்க சட்டசபை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் ஒவ்வொருவிதமான அஸ்திரங்களை பாஜக ஏவிவிட்டுப் பார்க்கிறது. கேரள உள்ளாட்சி தேர்தல்களில் 2010ஐ ஒப்பிடுகையில் 2015-ல் ஒருவிதமான முன்னேற்றத்தை பாஜக பெற்றது. அதனால் இந்த முறையிலும் இடதுமுன்னணி, ஐக்கிய முன்னணி எனும் இருபெரும் சக்திகளுக்கு மரண பயத்தை காட்டிவிடலாம் என்கிற மலையான நம்பிக்கையுடன் விதம் விதமான வியூகங்களை பாஜக கையில் எடுத்தது.
கிறிஸ்தவர்கள் மீது நம்பிக்கை
கிறிஸ்தவர்களை மிக கடுமையாக எதிர்க்கும் பாஜக கேரளாவில், கிறிஸ்தவர்கள் ஒன்றும் தீண்டத்தகாவர்கள் என்றது. கோவாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சிகளால் எங்கள் கட்சி மீது கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என பெருமிதம் பேசினார் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்.
612 சிறுபான்மை வேட்பாளர்கள்
அதேபோல் பிரதமர் மோடியின் முத்தலாக் சட்டமானது, கேரளாவில் முஸ்லிம் பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இது நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற நம்பிக்கையையும் சுரேந்திரன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த பெரும் நம்பிக்கையில் மொத்தம் 612 சிறுபான்மையினரை வேட்பாளர்களாகவே பாஜக நிறுத்தியது. இவர்களில் 112 பேர் முஸ்லிம்கள்; 500 பேர் கிறிஸ்தவர்கள்.
பாஜக முயற்சி தோல்வி
சிறுபான்மையினருக்கு எதிரான வழக்கமான பிரசாரத்துக்குப் பதில் சிறுபான்மையினரை அரவணைத்து வெற்றி பெறும் வியூகத்தை பாஜக கேரளாவில் கையில் எடுத்தது. ஆனால் இடதுமுன்னணியும் ஐக்கிய ஜனநாயக முன்னணியுமே தங்களுக்கான தேர்வுகள்; தங்களுடைய நம்பிக்கைக்குரிய கட்சியாக பாஜக இருக்கப் போவதில்லை; அப்படி பாஜக வேர்பிடிக்க இப்போதைக்கும் வாய்ப்பு இல்லை என்பதையே படுபட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்தது போல கேரள வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் பதிலளித்துவிட்டனர்.