ராகுல் காந்திக்கு நெருக்கடி? பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்! வயநாட்டில் சலசலப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியை உள்ளடங்கிய வயநாடு மாவட்டத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளர், கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

கேரளாவை பொறுத்த அளவில் மொத்தமுள்ள உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேசிய அளவில் என்னதான் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கியிருந்தாலும், கேரளாவை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எனவே, சிபிஎம் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றொருபுறமும் களமிறங்கியுள்ளன.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 19 இடங்களை வென்றது. இடதுசாரிகள் கூட்டணி ஒரேயொரு இடத்தை மட்டுமே வென்றது. எனவே இந்த முறை அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், இந்த முறை வெற்றி அவ்வளவு சுலபமாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். காரணம், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பாஜகவுக்கு தாவியிருப்பதுதான்.
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியை உள்ளடக்கிய வயநாடு மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர்தான் பி.எம்.சுதாகரன். இவர் தற்போது காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து பேசிய சுதாகரன்,
"நான் வயநாடு மாவட்டத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறேன். ராகுல் காந்தி இந்த தொகுதியில்தான் போட்டியிடுகிறார். ஆனால், அவரை என்னால் அணுகவே முடியவில்லை. கட்சியின் பொதுச் செயலாளருக்கே இப்படி எனில், சாதாரண மக்கள் எப்படி ராகுலை அணுக முடியும்? அவருக்கு ஏற்கெனவே 5 ஆண்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. மீண்டும் ஒருமுறை 5 ஆண்டுகள் வழங்கினால் வயநாட்டின் வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கப்படும்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மற்றொரு தலைவரும் சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தார். எனவே, வயநாடு தொகுதியில் காங்கிரசுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயனை ஏன் அமலாக்கத்துறை கைது செய்யவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்களை உருவாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications