பரபரப்பு! கேரளாவில் கால்பந்து போட்டியின் போது சரிந்து விழுந்த பார்வையாளர் அரங்கம்.. பலர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளூர் கால்பந்து போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பார்வையாளர் அரங்கம் சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பூங்கோடு பகுதியில் உள்ள எல்.பி. பள்ளி மைதானத்தில் அகில இந்திய எழுவர் கால்பந்து தொடர்போட்டி நடைபெற்று வந்தது.
இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மைதானத்தை சுற்றிலும் தற்காலிகமான பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு கிடையாது! அதிகாரிகளுடன் ஆய்வு! திட்டப்பணிகள் பற்றி குடைந்தெடுத்த துரைமுருகன்!
கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் பார்வையாளர்கள்
இந்த நிலையில் நேற்றிரவு கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பான கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி மின்னொளி வெளிச்சத்தில் தொடங்குவதற்கு முன்பாகவே மைதானத்தில் பார்வையாளர்கள் குழுமி இருந்தனர். கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகை தந்ததால் பார்வையாளர் அரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் அருகே மின்னொளி கோபுரமும் மக்களின் மீது சாய்ந்தது.
200 பேர் காயம்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மறுபகுதியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் ஓடிச்சென்றனர். மீட்புப் பணிகளின் முடிவில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 200 பேர் காயமடைந்ததாகவும் அதில், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்த பார்வையாளர்கள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மைதானத்தில் குழுமிய 8,000 பார்வையாளர்கள்
இந்த விபத்துக்கு முக்கிய காரணம், பார்வையாளர்கள் அரங்கத்தில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமான எண்ணிக்கையிலான நபர்கள் அமர்ந்ததுதான் என போலீசார் கூறுகின்றனர். நேற்றைய இறுதிப் போட்டியை காண 8,000 பேர் வரை மைதானத்தில் குழுமி இருந்ததாகவும், அவர்களில் 3,000 பேர் கிழக்கு பகுதியில் உள்ள பார்வையாளர் அரங்கில் நெரிசலுக்கு மத்தியில் அமர்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
போலீசார் எச்சரிக்கை
இதுகுறித்து மலப்புரம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், இந்த விபத்து தொடர்பாக கால்பந்து தொடரின் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.