கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்.. பறவைகளை அழிக்க உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் உள்ள பண்ணையில் உள்ள கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாத நிலையில் அங்கு கடந்தாண்டு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட எடத்துவா, பள்ளிப்பாடு, தாளவாடி, தழக்காகர ஆகிய பகுதிகளில் ஏராளமான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன.
ஒவ்வொரு பண்ணையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வளர்க்கப்பட்டன. கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த பறவைகள் நோய் வாய்ப்பட்டு இறந்தது. இதுபற்றி அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மாநிலப் பேரிடராக அறிவிப்பு
அங்கு நடந்த ஆய்வில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவித பாக்டீரியாக்கள் மூலம் எச்.5, என்.8 வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக இருந்ததால், மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்தது.

ஆயிரக்கணக்கான வாத்துகள் இறப்பு
இந்நிலையில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தகழி பஞ்சாயத்து குட்டநாடு பகுதியில் விவசாயி ஒருவரால் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாத்துகள் இறந்து கிடந்ததை அடுத்து போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்ட பின்னர் புதிதாக பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டது.

மீண்டும் பறவைக்காய்ச்சல்
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாத்துகள் மற்றும் கோழிகளை அழிப்பதற்கு கால்நடை வளர்ப்புத் துறையினரால் விரைவான மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில் பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழிகள் மற்றும் வாத்துகளை அழிப்பதற்கு விரைவான மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறவைகளை அழிக்க உத்தரவு
பாதிப்புகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வாத்துகள், கோழிகள், முட்டைகள் மற்றும் பிற பறவைகளை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மேலும் பரவுவதைத் தடுக்க, குட்டநாடு பகுதியில் இருந்து 12 கிமீ சுற்றளவில் வாத்துகள், கோழிகள், முட்டைகள், உரம் மற்றும் பிற கோழிகளின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications