ஷாரோன் கொலை பகீர் : 'விஷ பாட்டில்' புதருக்குள் போன மர்மம்.. சிக்கிய 2 பேர்.. கிரீஷ்மாவுக்கு உடந்தை!
திருவனந்தபுரம் : காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் காதலி கிரீஷ்மாவை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷாரோனை கொல்ல கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்த நிலையில், விஷ பாட்டிலை ஜன்னல் வழியாக வீசியுள்ளார். அந்த பாட்டில் அங்கேயே கிடந்த நிலையில், போலீசாரின் விசாரணை தொடங்கியதும், கிரீஷ்மாவின் மாமா அதனை எடுத்து புதரில் ஒளித்து வைத்துள்ளார்.
மேலும், கிரீஷ்மாவுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிக் கொடுத்ததும் மாமா நிர்மல் குமார் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கஷாயத்தை தாய் சிந்து வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஷாரோன் பலி
கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). கல்லூரியில் படித்து வந்த இவர், ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி காதலியின் வீட்டுக்குச் சென்ற ஷாரோன், தனது வீட்டுக்கு வந்தவுடன் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஷாரோனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கடந்த 25-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

கஷாயத்தில் விஷம்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஷாரோன் ராஜின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் காதலி கிரீஷ்மாவை விட்டுக் கொடுக்காமல், அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். போலீஸ் விசாரணையில் கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். அவர், தனது காதலனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்தது தெரியவந்தது.

பினாயிலை குடித்த கிரீஷ்மா
கைது செய்யப்பட்ட கிரீஷ்மா, நெடுமங்காடு காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஷாரோன் ராஜின் ஊர்க்காரர்கள் சேர்ந்து கிரீஷ்மா வீட்டில் கல்வீசித் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன காரணம்?
ஷாரோனுக்கு கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கிரீஷ்மா கலந்து கொடுத்ததற்கு என்ன காரணம் என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் முடித்துள்ளனர். ஆனால், ஷாரோனால் தனக்கு சிக்கல் ஏற்படும், உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிடக்கூடும் என நினைத்த கிரீஷ்மா, ஷாரோனை கழற்றி விடுவதற்காகத் திட்டம் தீட்டியுள்ளார்.

கழற்றிவிட திட்டம்
தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார், இரண்டாவது தாரமே தங்கும் எனச் சொல்கிறார்கள், உன்னை இழக்க விரும்பவில்லை இப்போது நான் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என சோகமாகப் பேசியுள்ளார். ஆனால், ஜாதகம் எல்லாம் உண்மை இல்லை என ஷாரோன் சமாதானம் செய்ததால், அவரை கழற்றிவிட என்ன வழி எனத் தெரியாமல் யோசித்துள்ளார். அதன்பிறகே, வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் சிறிதளவு பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்துள்ளார்.

தாய், மாமாவுக்கு தொடர்பு
ஷாரோனுக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் கிரீஷ்மாவின் பெற்றோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தினர். இதுதொடர்பாக கிரீஷ்மாவின் தந்தை, தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்தக் கொலைச் சம்பவத்தில் கிரீஷ்மாவின் தாய் சிந்துவுக்கும், மாமா நிர்மல்குமாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விஷ பாட்டில்
சம்பவத்தன்று ஷாரோனுக்கு விஷம் கொடுத்த பின்பு காலி விஷ பாட்டிலை கிரீஷ்மா ஜன்னல் வழியாக வீட்டுக்கு வெளியே வீசியுள்ளார். அந்த பாட்டில் சில நாட்களாக ஜன்னலுக்கு வெளியேயே கிடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியதும், விஷ பாட்டில் குறித்து கிரீஷ்மாவின் தாயார் சிந்து தனது சகோதரர் நிர்மல் குமாரிடம் கூறியுள்ளார். உடனே நிர்மல் குமார் கொலைக்கான தடயங்களை அழிக்கும் நோக்கத்தில் ஜன்னல் அருகே கிடந்த பாட்டிலை எடுத்து அருகில் உள்ள குளத்தின் கரையில் இருந்த புதருக்குள் வீசியுள்ளார்.

தாயும் உடந்தை
இதற்கு தாயார் சிந்துவும் உடந்தையாக இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று சிந்துவையும், நிர்மல் குமாரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், விஷம் கொடுக்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நிர்மல் குமாரை வீட்டின் அருகே உள்ள குளத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று அங்கு புதரில் வீசப்பட்டிருந்த காலி விஷ பாட்டிலையும் கைப்பற்றினர்.

வாங்கிக் கொடுத்ததே மாமா
பூச்சிக் கொல்லி மருந்தை நிர்மல் குமார் தான் களியக்காவிளையில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கினார் என்றும், கஷாயத்தை பூவார் பகுதியில் இருந்து சிந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது. கிரீஷ்மாவின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கிரீஷ்மா தனது காதலனை கொன்ற வழக்கில் தாய், மாமா உள்ளிட்டோரும் உடந்தையாகச் செயல்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications