கேரளா வங்கி செய்த அற்புதமான விஷயம்.. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி!
வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை வங்கிக் கிளை வாடிக்கையாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரழிவில் தங்கள் உயிர்கள், வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த சூரல்மாலா கிளையில் கடன் பெற்றவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரளா வங்கி.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கனமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் இதுவரை 427-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை.

வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் ஆகியோர் கேரளா வங்கியின் சூரல்மாலா கிளையில் பெற்ற கடனை அந்த வங்கி நிர்வாகம் தள்ளுபடி செய்துள்ளது. திக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதன் சூரல்மாலா கிளையில் நிவாரணம் வழங்குவதற்காக வங்கியின் இயக்குநர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
எத்தனை பேருக்கு கடன் உள்ளது, எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது குறித்த தகவல்களை வங்கி அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை. தற்போது முதற்கட்ட பட்டியலில் உள்ள ஒன்பது பேரின் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூபாய் 29 கோடி கடனை கேரளா வங்கி தள்ளுபடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கேரளா வங்கி, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதுடன், வங்கி ஊழியர்களும் தானாக முன் வந்து தமது 5 நாட்கள் சம்பளத்தை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தானமாக அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications