சிலிர்க்குது! பீடி சுற்றும் சிறுவன் டூ அமெரிக்க நீதிபதி! தடைகளை உடைத்த "தனி ஒருவனின்" அசாத்திய பயணம்
திருவனந்தபுரம்: வறுமையின் பிடியால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பீடி சுற்றும் வேலைக்கு சென்ற சிறுவன், இன்று அமெரிக்காவில் நீதிபதியாக இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், கேரளாவில் 2 வேளை சாப்பாடு கூட கிடைக்காமல் இருந்த சிறுவன்தான் இப்போது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை கண்டு மனம் தளர்ந்துவிடாமல், கடினமான முயற்சித்தால் இந்த உலகில் அனைத்தும் சாத்தியம் என்பதைதான் இவரது வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடும் தாரக மந்திரம்.
கேரளாவில் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, உலக வல்லரசான அமெரிக்காவில் நீதிபதியாக உயர்ந்த அந்த மனிதரின் அசாத்திய பயணம் குறித்து இங்கு பார்க்கலாம்.
கூலித்தொழிலாளியின் மகன்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்தவர் சுரேந்திரன் பாட்டீல் (55). மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சுரேந்திரன் பாட்டீல், குழந்தைப் பருவம் முதல் பார்த்து வளர்ந்தது வறுமையை மட்டும்தான். தாய் - தந்தை இருவருமே கூலித் தொழிலாளர்கள். தினமும் கிடைக்கும் சொற்ப பணத்தை வைத்துதான் அன்றாட வாழ்க்கையை அவர்கள் நகர்த்தி வந்திருக்கிறார்கள். பச்சிளம் குழந்தையாக இருந்த சுரேந்திரன் பாட்டீலுக்கு அவர்களின் பெற்றோரால் பால் கூட வாங்கித் தர முடியாத சூழல் இருந்துள்ளது. இதனால் சோறு வடித்த நீர் மட்டுமே சுரேந்திரனுக்கு அவர்கள் கொடுத்து வளர்த்துள்ளனர்.
பள்ளியிலும் கேலி கிண்டல்
இப்படியாக வறுமையான சூழலில் வளர்ந்தாலும் சுரேந்திரனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் அவரது பெற்றோரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் சுரேந்திரனை சேர்த்துவிட்டனர். ஆனால், பள்ளிக்கூட சூழல் வறுமையை விட கொடுமையாக இருந்தது சுரேந்திரனுக்கு. அனைத்து மாணவர்களும் ஓரளவுக்கு நல்ல சட்டைகளை போட்டு வர, சுரேந்திரன் மட்டுமே கிழிந்து போன சட்டை, டவுசர்களை அணிந்து செல்வாராம். அதுவும் இரண்டு செட்டுகள் மட்டுமே அவருக்கு இருந்துள்ளது. கிழிந்த சட்டை, ஒல்லியான தோற்றம் கொண்டிருப்பதால் சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் சுரேந்திரன். ஆனாலும், எப்படியாவது படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணம் அந்த சிறு வயதிலேயே சுரேந்திரனின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது.
தந்தை மரணம்.. கையில் வந்த பீடி
பள்ளிக்கூடத்தில் இத்தனை கேலி கிண்டல்கள் இருந்தாலும், படிப்பில் சிறந்து விளங்கியிருக்கிறார் சுரேந்திரன். அந்த சமயத்தில்தான், அவரது வாழ்க்கையில் பெரும் சோகம் நிகழ்ந்தது. சுரேந்திரனின் தந்தை திடீரென நோய்வாய்பட்டு இறந்து போனார். அப்போது சுரந்திரன் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இதனால் ஏற்கனவே வறுமை நிறைந்த அவரது குடும்பத்தில் மேலும் கொடிய வறுமை சூழ்ந்தது. ஒருகட்டத்தில், சுரேந்திரன் வேலைக்கு சென்றால்தான் 2 வேளை உணவையாவது சாப்பிட முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய சுரேந்திரன், அங்கிருக்கும் பீடி தொழிற்சாலைக்கு பீடி சுற்றும் வேலைக்கு சென்றார்.
கஷ்டத்திற்கு மத்தியிலும்..
பீடி சுற்றும் வேலைக்கு சென்றாலும், சுரேந்திரனின் ஆசை முழுவதும் படிப்பில்தான் இருந்தது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவு அவரை உறங்கவிடாமல் செய்தது. இதனால் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்தார் சுரேந்திரன். காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் பீடி தொழிற்சாலைக்கு வந்துவிடுவாராம். இவ்வாறு கஷ்டப்பட்டு படித்த சுரேந்திரனுக்கு, கோழிக்கோடு சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது. பள்ளிப்படிப்பை போலவே கல்லூரி படிப்பையும் கூலி வேலைக்கு சென்றுக்கொண்டே முடித்தார் சுரேந்திரன்.
வாழ்கையை மாற்றிய திருமணம்
இவ்வாறு 1995-இல் சட்டப்படிப்பை முடித்த சுரேந்திரன் அங்கிருந்த நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார். சுரேந்திரனின் வாதத் திறமை அவரை ஒருசில ஆண்டுகளிலேயே திறமையான வழக்கறிஞர் என பெயர் எடுக்க வைத்தது. இதனால் ஓரளவுக்கு நல்ல வருமானமும் அவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சுரேந்திரனுக்கு சுபா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. நர்ஸாக பணிபுரியும் சுபா டெல்லியில் பணிபுரிந்ததால் சுரேந்திரனும் அங்கு சென்றார். பின்னர் தனது கடின உழைப்பால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார்.
அமெரிக்காவில் நீதிபதி
உச்ச நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுககும் மேல் பணிபுரிந்தார் சுரேந்திரன். அதிரடி வாதத்திறமையால் அவருக்கு வழக்குகள் குவியத் தொடங்கின. அந்த சமயத்தில், சுரேந்திரனின் மனைவிக்கு அமெரிக்காவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதனால் சுரேந்திரனும் அமெரிக்கா சென்றார். பின்னர் அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்ற கடினமான நுழைவுத் தேர்வை 5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு எழுதி வெற்றி பெற்றார். அதுவரை அவர் என்ன செய்தார் தெரியுமா? அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கணக்கராக வேலை செய்தார். இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துவிட்டு, சூப்பர் மார்கெட்டில் வேலை செய்கிறோமே என ஒரு நாளும் அவர் எண்ணியதில்லை. பின்னர் அமெரிக்காவில் பல நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த சுரேந்திரன், தற்போது டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக உயர்ந்துள்ளார்.
"யாரையும் தீர்மானிக்க விடாதீர்கள்"
இதுகுறித்து டெக்சாஸ் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற சுரேந்தின் பாட்டீல் கூறுகையில், "நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு ஒன்றே ஒன்றுதான் காரணம். அது எனது முயற்சி மட்டுமே. வாழ்க்கையில் பெரிய பெரிய தடைகள் எனக்கு முன்பு வந்தன. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினேன். பீடி சுற்றும் வேலையை பார்த்தேன். ஆனால், வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற லட்சியமே என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. நான் பள்ளியில் படிக்கும்போது ஊரில் உள்ள அனைவரும், "நீயெல்லாம் படித்து என்ன சாதிக்க போகிறாய்" எனக் கேட்டுள்ளனர். அந்த வார்த்தைகளை கேட்டு நான் சோர்வடையவில்லை. இன்னும் உத்வேகம் கொண்டு படித்தேன். எனது வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். உங்கள் வாழ்க்கையை உங்களை தவிர யாரும் தீர்மானிக்க முடியாது. யாரையும் தீர்மானிக்க விடாதீர்கள். வாழ்க்கயைில் கஷ்டம் இருக்கதான் செய்யும். ஆனால், அது நமக்கு ஒரு படிப்பினையை கற்றுக்கொடுக்கவே வந்திருக்கிறது என எண்ணுங்கள். நான் அப்படிதான் செய்தேன்" என்றார்.