Kerala Bus: பஸ்சில் உரசியதாக வீடியோ போட்டதால் தற்கொலை.. தலைமறைவான கேரள ரீல்ஸ் பெண்.. பெரிய சிக்கல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்தில் பயணித்த போது தீபக் என்பவர் தன்னை உரசியதாக கூறி பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதால் தீபக் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இந்த வீடியோவை பகிர்ந்த இளம்பெண்ணுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அப்பெண் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அதிக ரீல்ஸ் பெற வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். இதற்காக சில விபரீத செயல்களிலும் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. பட்டா கத்தியில் ரீல்ஸ் தொடங்கி அடுத்தவரை துன்புறுத்துவது வரை ரீல்ஸ் எடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

பஸ்சில் உரசியதால் தீபக் தற்கொலை
நமது அண்டை மாநிலமான கேரளவில் இளம்பெண் ஒருவர் எடுத்த ரீல்சால் ஒருவர் உயிரையே மாய்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் தீபக். இவர் ஒரு தனியார் டெக்ஸ்டைல்ஸில் பணியாற்றி வந்தார். கடந்த 16 ஆம் தேதியன்று வேலைக்காக கண்ணூருக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது, அவருடன் பயணித்த இளம் பெண் ஷம்ஜிதா என்பவர் வீடியோ ஒன்றை எடுத்தார். அதாவது தீபக் வேண்டும் என்றே தன் மீது உரசுவதாக குற்றம் சாட்டி இந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், மன உளைச்சலில் இருந்த தீபக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபக் வேண்டும் என்றே பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை என்றும் தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வந்தனர்.. கேரள பெண்ணின் செயலை பலரும் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அட்டைப் பெட்டிகளுடன் பயணம்
தீபக் உள்நோக்கத்துடன் பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை. இறங்கும் போது பையை எடுக்கும் போது தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வந்தனர். சில நெட்டிசன்கள் பெண்ணுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படியாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை இது தொடர்பான பதிவுகள் ஆக்கிரமித்து வருகின்றன.
மற்றொரு பக்கம் இனி பேருந்தில் சென்றால், அட்டை பெட்டியை வைத்து இடைவெளியுடன் நிற்பது போலவும் பெண்கள் செல்போன் எடுத்தாலே தலைதெறிக்க ஓடுவது போலவும் வீடியோ எடுத்து கேரளாவில் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
தலைமறைவான ரீல்ஸ் பெண்
இதற்கிடையே, தீபக் மரணம் குறித்து விசரிக்குமாறு கேரள மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்குப்பதிவு செய்து இருப்பதால் அந்த பெண்ணுக்கு இந்த விவகாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் அந்த பெண், தலைமறைவு ஆனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்
பேருந்தில் தனக்கு துன்புறுத்தல் நடப்பதாக உணர்ந்தால் உடனடியாக அதை தட்டிக்கேட்டு இருக்கலாம். ஆனால், வீடியோ எடுப்பதிலேதான் அந்த பெண் ஆர்வமாக இருந்தார் என்று சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவசரப்பட்டு அந்த பெண் மீது களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று மற்றொரு தரப்பினரும் வலைத்தளங்களில் காரசாரமாக விவாதித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications