சபரிமலை ஐதீகத்தை மீறிய போலீஸார்.. கமிஷனர், டிஜிபிக்கு பறந்த உத்தரவு.. ஆக்ஷனில் இறங்கிய நீதிபதிகள்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பதினெட்டாம் படிகளில் பக்தர்களை விரைவாக ஏற்றி விடுவதற்கு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சபரிமலையின் ஐதீகத்தை மீறி காவல் துறையினர் செயல்பட்டதாகவும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கமிஷனருக்கும், டிஜிபிக்கும் கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதத்தை தொடங்குவர்.
சிறுவர்கள் முதல் முதியோர் வரை கடும் விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்வர்.

ஐயப்ப பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையேறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இது பாரம்பரிய பாதையாகும். எரிமேலியில் இருந்து பெருவழிப் பாதை வழியாகச் செல்வது மிகவும் கடினமான பாதையாகும். இருப்பினும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருவழிப் பாதை எனும் மலைப்பாதையில் எருமேலி தொடங்கி சபரிமலை வரை நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதும் வழக்கம்.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்கா இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் அருகே சத்திரம், புல்மேடு ஆகிய இரண்டு பாதைகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சபரிமலையில் கடந்த ஆண்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து, நடப்பு ஆண்டில் சபரிமலைக்கு வரும் பக்தர்களை 18 படிகளில் வேகமாக ஏற்றி விடும் வகையில் சிறப்பு பயிற்சி பெற்ற காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், முதல்கட்டமாக 30 போலீஸார் 18 படிகளில் பக்தர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 25 ஆம் தேதி இவர்களுக்கான பணி நிறைவு பெற்றது. இதையடுத்து, தாங்கள் பணியாற்றிய பதினெட்டு படிகளில் நின்று பணி நிறைவுபெற்ற போலீஸார் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாகியுள்ளது.
இச்சம்பவம் சபரிமலை ஐதீகங்களுக்கு எதிரானது என்பதால் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, ஏடிஜிபி ஸ்ரீஜித், சன்னிதானத்தின் பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் தனி அதிகாரி பைஜுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இச்சம்பம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில டிஜிபிக்கும், சிறப்பு ஆணையருக்கும் கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, மண்டல பூஜை, மகரவிளக்கு நாட்களில் சபரிமலையில் அலங்காரத்துக்குப் பயன்படுத்துவதற்காக ஆர்கிட் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நேரம் வாடாமல் இருக்கும் மற்றும் வாசமில்லாத இந்தப் பூக்களை பயன்படுத்தக் கூடாது என்றும், ஐதீக முறைப்படியான பூக்களை அலங்காரத்துக்குப் பயன்படுத்துவதை திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும் என்று சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications