சபரிமலைக்கு பெண்கள் நுழைவதைத் தடுக்கும் வழிகாட்டுதலை கேரள அரசு திரும்பப்பெற்றது
திருவனந்தபுரம்: சபரிமலைவில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள இடதுசாரிகள் அரசாங்கம் எடுத்தது, இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து தற்போது நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜைகளில் 50 வயதுக்கு குறைவான பெண்களை சபரிமலை கோவிலில் 'தரிசனம்' செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்தது. ஆனால் திடீர் திருப்பமாக சபரிமலைக்கு பெண்கள் நுழைவதைத் தடுக்கும் வழிகாட்டுதலை தற்போது திரும்பப் பெற்றுள்ளது..
சபரிமலை கோயிலுக்கு வருகை தருவதற்கு மெய்நிகர் வரிசை முன்பதிவு முறை அமலில் உள்ளது. முதற்கட்ட முன்பதிவு முடிந்த பின்னர் இரண்டாம் கட்டமாக கடந்த வாரம் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க அனுமதி அளித்தது. அப்போது கேரள காவல்துறை 50வயதுக்கு உள்பட்ட பெண்கள் சபரிமலை பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று வழிகாட்டுதலை வெளியிட்டது.

உள்ளாட்சி தேர்தல்
இதனிடையே கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருவதால் இதை கருத்தில் கொண்டு கேரள அரசாங்கம் பெண்களைத் தடுக்கும் இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக இணையத்தில் இருந்து அகற்றியது ஊடகங்கள் இந்த விவகாரத்தை கூறி வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கியதால் அகற்றியது.

கேரள அரசு
உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து சபரிமலை கோயிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடிவு செய்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த ஆண்டு வெளிப்படையாக பெண்களுக்கு தடை என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் தடை தான் இருந்தது. இந்த ஆண்டு 50 வயதிற்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை கேரள அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் பரபரப்பு கிளம்பியது.

சிபிஎம் தலைவர்கள்
கேரள மாநில ஆளும் கட்சியான சிபிஎம்மின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களில் ஒரு பகுதியினர் அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதியவர்கள் வரலாம்
50 வயதிற்குட்பட்ட பெண்கள் மீதான தடைக்கு பதிலாக, மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில் 60 முதல் 65 வயதுக்குட்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது மருத்துவ சான்றிதழ்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கு நிலுவை
சுவாரஸ்யமாக, தற்போதைய யாத்ரீக பருவத்திற்கு முன்னதாக தொடங்கிய மெய்நிகர் வரிசை முன்பதிவின் முதல் சுற்று முன்பதிவில் கூட பெண்கள் நுழைவதற்கு எந்த தடையும் குறிப்பிடவில்லை. அனைத்து வயது பெண்களுக்கும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications