கணவனை கொன்று புதைத்துவிட்டேன்.. மனைவி தந்த வாக்குமூலம்.. மறுநாளே வந்து நின்ற கணவன்.. கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரளாவில் கணவனை கொன்றுவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கடைசியில் ஏற்பட்ட திருப்பம் போலீசாரை மட்டுமின்றி அந்த பெண்ணையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அஃப்சானா மற்றும் நௌஷாத் இருவரும் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அடூரில் வசித்து வந்தனர். டிசம்பர் 2021 இல், நௌஷாத் காணாமல் போனதாக புகார் வைக்கப்பட்டது. ஒரு மாதமாக அவரைக் காணவில்லை என்று அந்தப் பெண் கூறியதை அடுத்து, அவரது உறவினர்கள், நௌஷாத் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி போலீசாரை சந்தித்து அந்த பெண் உதவி கேட்பது உண்டு. இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு கூடல் என்ற பகுதியில் நௌஷாதைக் கண்டதாக அப்சானா கடந்த வாரம் போலீஸாரிடம் கூறியிருந்தார். இதை பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் கணவரை கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து கணவரின் உடலை தேடுவதற்காக போலீசார் பல இடங்களில் தோண்டி உள்ளனர். அந்த பெண்ணின் வீடு, வீட்டின் பின்புறம் என்று பல இடங்களில் தேடி உள்ளனர். தனது வீட்டின் உள்ளேதான் உடல் புதைக்கப்பட்டு உள்ளது என்று அந்த பெண் கூறியதால் அங்கேயும் தேடி உள்ளனர். ஆனால் உடல் எங்கும் கிடைக்கவில்லை.
அப்சானாவிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெற போலீஸார் முயன்றபோதுதான் அந்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி இன்று காலை தொடுபுழாவில் கூலித் தொழிலாளியாக நௌஷாத் பணிபுரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நௌஷாத் நண்பர்கள் போன் செய்து நௌஷாத் தங்களுடன் வேலை பார்ப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த பெண் குறித்த செய்தியை செய்திகளில் படித்தாகவும் அதில் நௌஷாத்தை அடையாளம் கண்டுகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் எங்களுடன் வசிக்கும் போது அவரின் மனைவி ஏன் அவரை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்ததார் என்று குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் குழப்பம் அடைந்து நௌஷாத் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் நௌஷாத்தை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அவரிடம் செய்யப்பட்ட விசாரணையில் சில ஆண்களுடன் சேர்ந்து கொண்டு அப்சானா தன்னை தாக்கியதாக நௌஷாத் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனால் அவருடன் வாழ்வதற்கு பயந்துகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டதாக நௌஷாத் கூறி உள்ளார். மனைவி தன்னை ஆள் வைத்து அடிப்பார் என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓடிவிட்டதாக இவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து நௌஷாத்தை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்னொரு பக்கம் அஃப்சானா ஏன் போலீசிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்தார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications