காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. வேறு யாரும் இல்லை.. வெளியான புதிய தேர்தல் சர்வே
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டைப் போலவே நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் சீக்கிரம் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகள் அங்கு மெல்லச் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் கேரளத் தேர்தல் தொடர்பான புதிய சர்வே வெளியானது. அதில் காங்கிரஸுக்கு வெல்ல வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதில் காங்கிரஸில் இருக்கும் பெரிய பிரச்சனை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டோடு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கேரளா
தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் களம் சூடுபிடித்துவிட்ட நிலையில், மற்ற மாநிலங்களிலும் இப்போது மெல்லத் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. மேற்கு வங்கம், கேரளா என வரிசையாக மாநிலங்களில் கட்சிகள் தேர்தலைப் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதில் கேரளாவில் சமீபத்தில் புதிய சர்வே ஒன்று வெளியான நிலையில், அதில் ஆளும் தரப்புக்கு எதிரான போக்கு அதிகரிப்பது போலவே தெரிகிறது.
வோட் வைப் என்ற அமைப்பு நடத்திய அந்த சர்வேயில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு மக்களிடையே எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 50%க்கு மேல் பினராயி விஜயன் ஆட்சி மோசமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல 29% பேர் மட்டுமே இடதுசாரிகளுக்கு வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸுக்கு ஆதரவு
காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதாக 32.7% பேர் தெரிவித்துள்ளனர். இந்த சர்வேயின்படி பார்த்தால் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கப் பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி செய்து வரும் சூழலில், ஆட்சிக்கு எதிரான போக்கு காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது.
வில்லன் காங்கிரஸ் தான்
அதேநேரம் காங்கிரஸுக்கு வில்லன் இந்தத் தேர்தலில் வேறு காங்கிரஸ் தான் என்கிறார்கள் கேரள மக்கள். இந்த சர்வேயில் சுமார் 42% மக்கள் காங்கிரஸுக்கு உட்கட்சி மோதலே பிரதானச் சிக்கல் என்கிறார்கள். அதேபோல 8.5% பேர் வலிமையான பிரச்சாரம் இல்லாதது சிக்கல் என்கிறார்கள். 7.5% பேர் வலிமையான தலைமை இல்லாதது என்கிறார்கள். மற்ற அனைத்துமே 10%க்கு கீழ் தான் இருக்கிறது.
அதாவது கேரளச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை உட்கட்சிப் பூசலே காலி செய்யும் என மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் பழமையான கட்சியான காங்கிரஸில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கும். அங்குத் தொண்டர்களைக் காட்டிலும் கோஷ்டிகள் அதிகம் என்று கூட சிலர் சொல்வார்கள். பல சூழல்களில் இந்த உட்கட்சிப் பூசலே காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பறிப்பதாகக் கூட மாறியுள்ளது.
காங்கிரஸுக்கு சிக்கல்
கேரளாவிலும் கூட அந்த ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. ஏனென்றால் காங்கிரஸ் கூட்டணி இந்த சர்வேயில் முன்னிலை வகித்தாலும் கூட இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே 3% மட்டுமே வாக்கு வித்தியாசம் இருக்கிறது. உட்கட்சிப் பூசலால் கடைசி நேரத்தில் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யவில்லை என்றால் காங்கிரஸுக்கு எதிராக அது மாறி, கேரளா மீண்டும் காங்கிரஸ் கையில் சிக்காமலும் போகும் அபாயம் இருக்கிறது.!
கேரளாவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 140 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. 71 தொகுதிகளில் வெல்லும் கட்சியே பெரும்பான்மையை பெற்று ஆட்சியை அமைக்கும். கடந்த 2021 தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி 99 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கூட்டணியால் 41 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக 113 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.












Click it and Unblock the Notifications