நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல! கேரளா ஐகோர்ட்டில் கும்பிட்டபடி நின்ற பெண்ணுக்கு நீதிபதி அறிவுரை!
திருவனந்தபுரம்: நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிபதிகள் முன்பாக சாமியை கும்பிடுவது போல் நிற்க வேண்டியதில்லை என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கருத்து நீதித்துறை வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கேரள மாநில ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019ஆம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், தனது வீடு அருகே ஒலிப்பெருக்கியை கட்டிக்கொண்டு சிலர் ஆராதணைகள் நடத்துவதால் தன்னால் வீட்டில் குடியிருக்க முடியவில்லை எனக் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அந்த புகாரை அனுப்பி விசாரிக்கும் படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புகார் கொடுத்த பெண்ணிடம் விசாரிக்கச் சென்ற போது தங்களை அவமரியாதை செய்ததாகவும் தரக்குறைவாக திட்டியதாகவும் கூறி அந்த பெண் மீதே போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது பதியப்பட்ட பொய்வழக்கை குவாஷ் செய்யுமாறு கேரள உயர்நீதிமன்றத்தை நாடிய பெண் வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.
அபோது நீதிமன்றத்தில் கும்பிட்டபடி நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன், ''நீதியின் கோவிலாக நீதிமன்றங்கள் உள்ள போதும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல எனக் கூறினார். இதனால் நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட யாராக இருந்தாலும் நீதிபதி முன்பாக சாமியை கும்பிடுவது போல் நிற்க வேண்டியதில்லை அறிவுரை வழங்கினார்.
நீதிமன்றத்திற்குள் வரும் போது அதற்குரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொண்டாலே போதுமானது என்றும் அதை விடுத்து கையெடுத்து கும்பிட்டுக் கொண்டு நிற்க தேவையில்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதி போலீஸார் பதிந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். அதுமட்டுமல்ல புகார் கொடுத்த பெண் மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்த பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications