பெண்கள் மாமியார்களுக்கு அடிமைகள் அல்ல! குடும்ப நல வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சுளீர் கருத்து!
திருவனந்தபுரம்: பெண்கள் மாமியார்களுக்கு அடிமைகள் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்து தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர், திருச்சூர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த திருச்சூர் குடும்ப நல நீதிமன்றம் , திருமணத்தின் புனித தன்மையை மேற்கோள் காட்டி சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தி விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்தப் பெண் கொட்டாரக்கரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில் பணியிட மாற்றம் காரணமாக குழந்தையுடன் தலச்சேரிக்கு குடிபெயர்ந்த அந்த பெண், கொட்டாரக்கரா குடும்ப நல நீதிமன்றத்திலிருந்து தலச்சேரி குடும்ப நல நீதிமன்றத்துக்கு விவாகரத்து வழக்கை மாற்றித் தருமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், திருச்சூர் குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி, பெண்கள் ஒன்றும் மாமியார்களுக்கும், அம்மாகளுக்கும் அடிமை கிடையாது என்ற கருத்தை தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல 2023ஆம் ஆண்டிலும் ஆணாதிக்க மனநிலை போக்கு தொடர்வதை எண்ணி வேதனையை பதிவு செய்தார். கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தெரிவித்துள்ள இந்தக் கருத்து பெண்ணியவாதிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பதை தான் இந்தக் கருத்தின் வாயிலாக நீதிபதி உணர்த்தியுள்ளார்.
இதனிடையே நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிபதிகள் முன்பாக சாமியை கும்பிடுவது போல் நிற்க வேண்டியதில்லை என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் கடந்த வாரம் தான் கருத்து தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து நீதிபதி தேவன் ராமச்சந்திரனும் பெண்களுக்கான உரிமை தொடர்பாக இப்படியொரு கருத்துக் கூறியிருக்கிறார். நீதித்துறை வட்டாரத்தில் மேற்கண்ட இரண்டு கருத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications