ஏங்க இது லிஸ்ட்லயே இல்லையே! கேரளாவில் எதிர்பாராத ட்விஸ்ட்! தாமரையுடன் சேர்ந்த கை! புலம்பிய பினராயி!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் எழுச்சியும், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், தற்போது ஒரு பஞ்சாயத்தை கைப்பற்ற பாஜகவும் காங்கிரசும் கைகோர்த்து இருப்பது பினராயி விஜயனை கொந்தளிக்க வைத்துள்ளது.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸுக்கு பெரிய எழுச்சியும், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியதுமே கேரளா மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் கேரளாவில் ஹாட்ரிக் வெற்றி பெறலாம் என மிகவும் தெம்பாக இருந்த ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கடும் பின்னடைவை சந்தித்திருப்பது முதல்வர் பினராயி விஜயனை மிகவும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கேரளா உள்ளாட்சி தேர்தல்
நடந்து முடிந்த இந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள் மற்றும் பல ஊரக உள்ளாட்சிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த எல்டிஎஃப் இந்த முறை பல இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) எதிர்பார்த்ததை விட சிறந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
பாஜக வெற்றி
எல்லாவற்றிற்கும் மேலாக, கேரளாவில் பாஜக பெற்ற வெற்றி தான் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியையும், மேலும் இரு நகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக கேரளாவில் வேரூன்ற முடியாமல் தவித்த பாஜக, இந்த முறை பெற்ற வெற்றியை பெருமையாகக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் மட்டத்தூர் பஞ்சாயத்தை கைப்பற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் 8 பேர், கட்சியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டத்தூர் பஞ்சாயத்து
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மட்டத்தூர் பஞ்சாயத்தில், மொத்தம் 24 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், எல்டிஎஃப் 10 இடங்களையும், யூடிஎஃப் 8 இடங்களையும், தே.ஜ கூட்டணி 4 இடங்களையும், சுயேச்சைகள் 8 இடங்களையும் வென்றிருந்தனர். ஆரம்பத்தில் ஒரு சுயேச்சை உறுப்பினருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. ஆனால் அவர் பின்னர் எல்டிஎஃப் கூட்டணியில் சேர்ந்துவிட்டார். இது காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் பாஜக கூட்டணி
இதையடுத்து, காங்கிரஸைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் தங்களது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து பாஜகவுடன் கைகோர்த்தனர். பாஜக ஆதரவில் காங்கிரஸ் எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த டெய்சி ஜோசி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அந்தப் பகுதியில்28 ஆண்டு காலமாக நீடித்த கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. காங்கிரஸின் உட்கட்சி பிரச்சினைகளும், தலைமைக்கு எதிரான அதிருப்தியும் இதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
பினராயி விஜயன்
இந்தச் சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில்," காங்கிரஸ் தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாஜக நோக்கி தாவத் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதை இது மிகவும் தெளிவாகக் காட்டுகிறது., இதுபோன்ற அரசியல் நாடகங்கள் கேரளாவில் இதுவரை நடக்காத அளவுக்கு பெரிய மாற்றமாக உள்ளது. பாஜக அவர்களை முழுவதுமாக விழுங்கிவிட்டது.
பாஜக காங்கிரஸ்
ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் சேர்ந்து இருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸில் இருப்பவர்கள் ஒரே இரவில் பாஜகவுக்கு செல்ல தயங்க மாட்டார்கள் என்பது தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கை சின்னத்தை மறந்து விட்டு தாமரை சின்னத்தை ஏற்றுக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். பல இடங்களில் பாஜக காங்கிரஸ் இடையே சமரசம் ஏற்பட்டதும்.. பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கை கொடுப்பதும் உறுதியாகியுள்ளது" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications