"ப்ளீஸ்.. என் பேர சொல்லிடாதீங்க.." லாட்டரியில் ரூ.10 கோடி வென்றவர் கெஞ்சல் - காரணத்தை கேளுங்க!
திருவனந்தபுரம்: கேரளாவில் அண்மையில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான ரூ.10 கோடியை பெற்ற அதிர்ஷ்டசாலி ஒருவர் தனது பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் வெளியிட வேண்டாம் என லாட்டரி நிறுவனத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ரூ.10 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலியை கண்டுபிடிக்க பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் வலைவீசித் தேடி வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அவர் கூறிய காரணத்தை பரிசீலித்த கேரள லாட்டரித் துறையும் அவரது பெயரை வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

தினம் ஒரு கோடீஸ்வரர்
கேரளாவில் அரசே லாட்டரி விற்பனையை செய்து வருகிறது. இதற்காக லாட்டரித் துறை என்ற தனித்துறையே அங்கு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் லாட்டரி விற்பனை செய்யும் சிக்கிம், பஞ்சாப், அசாம், மேகாலயா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினமும் ரூ.1 கோடி வரை லாட்டரி டிக்கெட்டுகளும், பண்டிகை தினங்களில் ரூ.10 கோடி, ரூ.15 கோடி வரை லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கதவை தட்டிய ரூ.10 கோடி பரிசு
இந்நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக சிறப்பு குலுக்கலாக ரூ.10 கோடியை முதல் பரிசாக கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதன் குலுக்கல் இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ.10 கோடி திருச்சூரில் உள்ள லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தில் இருந்து விற்கப்பட்ட சீட்டுக்கு கிடைத்தது. எனினும், பல நாட்களாகியும் அவரது பெயர் விவரங்களை கேரள லாட்டரித் துறை வெளியிடவில்லை.

பெயர் வெளியிட மறுப்பு
பொதுவாக, முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியின் பெயர் விவரங்களை லாட்டரித்துறை ஒருசில தினங்களில் வெளியிட்டு விடும். ஆனால், இந்த முறை அப்படி வெளியிடப்படாததால் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அதிர்ஷ்டசாலியின் பெயரை வெளியிடுமாறு லாட்டரித் துறையையும், லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தையும் தொடர்புகொண்டு கேட்டனர். ஆனால், அவர்கள் 10 கோடி வென்ற அந்த அதிர்ஷ்டசாலியின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.

"சொந்தக்காரர்களே காரணம்"
இதுகுறித்து கேரள லாட்டரி துறை உயரதிகாரிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு ஓணம் பம்பர் குலுக்கலில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.15 கோடி பரிசு கிடைத்தது. அதன் பின்னர், அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரிடம் பணம் கேட்டு நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர், "எனக்கு பரிசுத்தொகை விழாமலேயே இருந்திருக்கலாம்" என கண்ணீருடன் கூறினார். இதுபோன்ற நிலை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது ரூ.10 கோடி விழுந்த அதிர்ஷ்டசாலி தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம். அதிர்ஷ்டசாலி பெயரை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தெரிந்துகொள்ள முடியாது" என அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications