பிடிங்க, பிடிங்க.. கத்திய இளம் பெண்.. ஊரே ஒன்று கூடி வாலிபருக்கு தர்ம அடி.. அப்புறம்தான் "ட்விஸ்ட்"
திருவனந்தபுரம்: கேரளாவில் நட்ட நடு சாலையில் பைக் ஒன்றை பெண் ஒருவர் துரத்திக் கொண்டு ஓட, என்னவோ ஏதோ என நினைத்த பொதுமக்கள் அந்த பைக் காரரை விரட்டிப் பிடித்து மொத்து மொத்தென மொத்தி எடுக்க, கடைசியில் உண்மை தெரிந்து அனைவரும் சைலன்ட்டாக நடையை கட்டியுள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்தவர் விபின் காலிகோட் (34). இவருக்கு வித்யா (28) என்ற மனைவியும் இரு சிறு குழந்தைகளும் உள்ளனர்.
இதனிடையே, விபினுக்கு அலுவலகத்திலும், அவரது வீட்டுக்கு அருகிலும் ஏராளமான பெண் தோழிகள் இருந்துள்ளனர். பெண்களுடன் தனது கணவர் பழகுவது வித்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மாட்டிக்கிட்டியே பங்கு..
இந்நிலையில், விபின் இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல அலுவலகம் சென்று வருவதாக கூறி சென்றிருக்கிறார். இதனிடையே, ஒரு அவசரத்துக்காக கணவன் விபினை மனைவி வித்யா செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், அவரது அலுவலக நண்பருக்கு போன் செய்ய, விபின் அலுவலகத்துக்கு செல்லாதது தெரியவந்தது.

இன்னைக்கு ரெண்டுல ஒன்னு..
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வித்யா, தனது கணவர் எப்போதும் தனது நண்பர்களோடு செல்லும் ஷாப்பிங் மாலுக்கு சென்று பார்க்கலாம் என பஸ் பிடித்து அங்கு வந்திருக்கிறார். வித்யா ஷாப்பிங் மால் நிறுத்தத்தில் இறங்குவதற்கும், விபின் ஒரு பெண்ணுடன் மாலில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்துள்ளது. வேறொரு பெண்ணுடன் தனது கணவனை பார்த்த வித்யா, அவரை நோக்கி வேகமாக வருவதை எதேச்சையாக பார்த்து விட்டார் விபின்.

பைக்ல போனா மட்டும் உட்ருவனா..
கோபத்தில் தலைவிரி கோலமாய் வந்துக் கொண்டிருந்த வித்யாவை பார்த்ததும் பயத்தில் கை-கால்கள் உதற, உடனே தன்னுடன் இருந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்து, தனது பைக்கை எடுத்து அங்கிருந்து வேகமாக சென்றார். ஆனால், வித்யாவோ அவரை விடாமல் அவனை பிடிங்க.. பிடிங்க.. என கத்தியவாறே துரத்திச் சென்றிருக்கிறார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அந்தப் பெண்ணிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டு செல்கிறான் என நினைத்து அவருடன் சேர்ந்து அந்த பைக்கை துரத்தியுள்ளனர். இதனால் அந்த ஏரியா முழுவதுமே டிராஃபிக் ஜாம் ஆனது.

மூஞ்சு பஞ்சர்.. விடுங்க பாஸ்..
ஒரு வழியாக, அந்த பைக்கை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள், என்ன ஏது எனக் கூட கேட்காமல் விபினை வெளுத்துக் கட்டினர். இதில் அவருக்கு வாயிலும், மூக்கிலும் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அப்போது அங்கு வந்த வித்யா, தான் செய்ய நினைத்ததை மக்களே செய்துவிட்டதை பார்த்து, அவரிடம் "வாங்க வீட்டுக்கு போகலாம்" எனக் கூறியுள்ளார். என்னடா இது.. இவ்வளவு தூரம் துரத்தி பிடித்துவிட்டு, வீட்டுக்கு போகலாம் என அந்தப் பெண் கூறுகிறாரே என குழம்பிய மக்கள், வித்யாவிடம் விசாரித்துள்ளனர். அதன் பிறகு நடந்த விஷயத்தை வித்யா கூற, என்ன செய்வதென தெரியாமல் விழித்த மக்கள், "சரி விடுங்க பாஸ்.. பாத்து பத்திரமா வீட்டுக்கு போங்க.." எனக் கூறியவாரே நடையை கட்டினர். இந்த களோபரத்தால் அந்தப் பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததுதான் மிச்சம்.












Click it and Unblock the Notifications