28 நாட்கள் குவாரண்டைனுக்கு பின்னரே சிலருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் .. கேரளாவில் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் 28 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னரே சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நாட்டிலேயே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக உயர்ந்து வருகிறது கேரளா மாநிலம். அங்குதான் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை முதன்முதலாக தொடங்கியது. அதேபோல் பிளாஸ்மா சிகிசைக்கும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. அதற்கான ஆய்வுகளும் அங்கு வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் அதிகம் பேர் வேலை செய்வதால் கொரோனா தாக்குதலில் கேரளா மாநிலம் தான் முதல்முதலாக இந்தியாவில் பாதிக்கப்பட்டது. அதனால் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்விளைவாக கேரளாவில் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது கொரோனா பாதிப்பு
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற முதியவர் பலி.. மே 3 வரை ஊரடங்கு தளர்த்தப்படாது.. கடலூர் ஆட்சியர்
வாகன போக்குவரத்து
இதனால் கேரளாவில் நாளை முதல் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகன போக்குவரத்துக்கும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களை திறக்கவும் பல்வேறு பணிகளையும் தொடரவும் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது-
54வயது பெண்ணுக்கு பாதிப்பு
இந்நிலையில் கேரளாவில் 54 வயதான ஒரு பெண் வெளிநாட்டிலிருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண் வெளிநாட்டில் இருந்து வந்த நாளில் இருந்தே வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தினர். இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இப்படி 28 நாட்களுக்கு பிறகு கொரோனா இருப்பது உறுதியானவர்களின் எண்ணிக்கை டஜனுக்கும் அதிகம் என்று கேரளா மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, தனிமைப்படுத்துதல் காலம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்று முதல் 14 நாட்கள் வரை இருக்கும், மேலும் அறிகுறிகள் பொதுவாக ஐந்து நாட்களுக்குப் பிறகு தோன்றும். இருப்பினும், இந்த அறிகுறிகள் மிகவும் லேசானவை, சில சந்தர்ப்பங்களில், நோயாளிகளிடம் அவை சிறிய அறிகுறி கூட காட்டாமல் அமைதியாக இருந்துவிடுகன்றன.
கொரோனா உறுதி
கேரளாவில், மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், அறிகுறியற்ற நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் 28 நாட்கள் ஆகும். இந்நிலையில் குறிப்பிட்ட பெண் மார்ச் 18 அன்று ஷார்ஜாவிலிருந்து கண்ணூருக்கு வந்தார்., மேலும் வீட்டில் கண்காணிப்பில் இருந்தார். மாவட்டத்தில் சிறப்பு சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக அவரது மாதிரிகள் ஏப்ரல் 16 அன்று சேகரிக்கப்பட்டன, மேலும் முடிவுகள் சனிக்கிழமை கிடைத்தன. இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரி தகவல்
இதேபோல் துபாயில் இருந்து கேரளா வந்த கண்ணூரைச் சேர்ந்த 30 வயது நபருக்கு 28 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், இதுபற்றி கூறுகையில் "28 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் ஒரு டஜன் மக்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. கண்ணூரில் வெளிநாட்டிலிருந்து திரும்பி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படட அனைவரையும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் நாங்கள் சோதித்து வருகிறோம். அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டாலும் இதுவரை இந்த நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, " என்று அந்த அதிகாரி கூறினார். "கேரளாவில் நோயாளிகளிடையே காணப்படும் வைரஸ் ஒரு பிறழ்வை உருவாக்கியுள்ளதா என்பதை நாங்கள் ஆராய வேண்டும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.