‘10வது பாஸாகிறது அவ்ளோ ஈஸியில்லை’.. பிளக்ஸ் வைத்து தன்னைத்தானே பாராட்டி கொண்ட மாணவர்!
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காகத் தன்னைத் தானே பாராட்டி மாணவர் பிளக்ஸ் வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
திருவனந்தபுரம்: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காகத் தன்னைத் தானே பாராட்டி கேரள மாணவர் ஒருவர் பிளக்ஸ் போர்ட் வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
'உன்னையெல்லாம் யாரு மதிக்கப் போறாங்க.. உன்னை நீயே மதிச்சாத்தான் உண்டு..' என கவுண்டமணி, ஒரு படத்தில் தன் படத்திற்கு தானே மாலை போட்டு மரியாதை செய்வார். ஏறக்குறைய இந்தச் செய்தியும் அப்படிப்பட்டதுதான்.
தங்கள் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு என பள்ளி நிர்வாகமும், டியூசன் செண்டர்களும் பாராட்டி பேனர் வைத்துக் கொண்டிருக்க, 'நீங்க என்னை பாராட்டாட்டி என்ன? என்னை நானே பாராட்டிக்கிறேன்..' என தனக்குத் தானே பிளக்ஸ் வைத்து இணையத்தில் பிரபலமாகி இருக்கிறார் கேரள மாணவர் ஒருவர்.

பத்தாம் வகுப்பு மாணவர்
கேரளாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 31 தொடங்கி, ஏப்ரல் 29 வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டன. அதில், தேர்வு எழுதியவர்களில் 99.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர் தான் ஜிஷ்ணு என்ற மாணவரும்.

வித்தியாசமான முடிவு
பத்தனம் திட்டா, கொடுமண் பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர், பத்தாம் வகுப்பில் மிகவும் அதிகமில்லாமல், அதே சமயம் மிகவும் குறைவில்லாமல் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தான் தேர்ச்சி பெற்றதே, தன்னைப் பொறுத்தவரை பெரிய விசயம் என நினைத்துள்ளா ஜிஷ்ணு. எனவே, தன் வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாட அவர் முடிவு செய்தார்.

பாராட்டி பிளக்ஸ்
அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்காக தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதாகக் கூறி, பிளக்ஸ் போர்டு ஒன்றை தயார் செய்து, தனது வீட்டின் வாசலில் வைத்துள்ளார் ஜிஷ்ணு. இந்த பிளக்ஸ் போர்டு அந்தப் பகுதியில் சென்றவர்களைக் கவர, ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பகிர, உள்ளூரில் மட்டுமல்லாமல், இணையத்திலும் பிரபலமாகி விட்டார் ஜிஷ்ணு. இந்தப் புகைப்படம் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி பார்வைக்கும் செல்ல, அவரும் ஜிஷ்ணுவின் வெற்றியைப் பாராட்டி பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

கல்வி அமைச்சர் பாராட்டு
அதில், 'ஜிஷ்ணு இன்னும் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' எனப் பாராட்டி இருக்கிறார் சிவன்குட்டி. இதனால் சமூகவலைதளங்கள் மட்டுமின்றி, ஊடகங்களிலும் செய்தியாகி விட்டார் ஜிஷ்ணு. யாரும் பாராட்டவில்லை என அவர் வருத்தப்பட்டதற்கு பலனாக, இப்போது எங்கெங்கிருந்தோ வாழ்த்துக்களும், பாராட்டுகளும் ஜிஷ்ணுவிற்கு குவிந்து வருகிறது.

எங்களுக்கு ஏன் இல்லை?
"பள்ளி நிர்வாகம் சார்பாக முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கே பள்ளி முன்பு பிளக்ஸ் போர்டு வைக்கிறார்கள். தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் பிளக்ஸ் வைப்பது இல்லை. பொதுத்தேர்வுக்கு தயாராகி, தேர்ச்சி பெற நாங்கள் படும் பாடு எங்களுக்குத்தான் தெரியும்.

இதுதான் காரணம்
அடுத்த ஆண்டுக்கான மாணவர்களுக்கான சேர்க்கையை நிரப்ப பெருமைக்காகத்தான் அவர்கள் பிளக்ஸ் போர்டுகளை வைக்கிறார்கள். எனவே, எங்களை யாரும் கண்டுகொள்வது இல்லை. அதனால்தான் என்னை நானே பாராட்டிக் கொண்டேன்" என கூலாக தான் பிளக்ஸ் போர்டு வைத்ததற்கான காரணத்தைக் கூறுகிறார் ஜிஷ்ணு.












Click it and Unblock the Notifications