புது புது வழிகளில் கொலைகள்.. கலங்கும் கேரளா.. திரிஷ்யம் பாணியில் மைத்துனரை வீட்டில் புதைத்த மச்சான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் தனது மனைவியின் தம்பியை 'திரிஷ்யம்' பட பாணியில் அவரது மச்சான் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் விபத்து என போலீஸாரால் கருதப்பட்ட சம்பவம், பிறகு திட்டமிட்ட கொலை எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது கேரளா முழுவதும் இந்த சம்பவம் தான் பேசுபொருளாக மாறியுள்ளது. நாட்டில் எல்லா பகுதிகளிலும் கொலைகள் அரங்கேறுவது வழக்கமானது தான். ஆனால், நாட்டின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் சமீபகாலமாக மிகவும் வித்தியாசமான முறையில் கொலைகள் நடைபெற்று வருகின்றன.

கேரளாவும், கொலைகளும்...
கடந்த 2019-ம் ஆண்டு கேரள மாநில கோழிக்கோட்டில் தனது கணவர், மாமனார், மாமியார் உட்பட 6 பேரை உணவில் சயனைடு கலந்து கொடுத்து ஒரு பெண் கொலை செய்தார். இந்த சம்பவம் கேரளா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டது. அதேபோல, பாம்பை வாடகைக்கு வாங்கி தனது மனைவியையே கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல, கேரளாவில் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது இதுபோன்ற வித்தியாசமான பயங்கர கொலைகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அதுபோன்ற மற்றொரு பயங்கர கொலை சம்பவம்தான் கேரளாவில் தற்போது நடந்துள்ளது.

காணாமல் போன பிந்துமோன்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஆர்யாடு பகுதியைச் சேர்ந்தவர் பிந்துமோன் (43). பாஜக உறுப்பினரான இவர், அந்தப் பகுதியில் கடை நடத்தி வருகிறார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனிடையே, கடந்த 25-ம் தேதியன்று, தனது நண்பர் ஒருவரின் வீட்டு துக்க நிகழ்வில் கலந்துகொள்வதாக கூறி பிந்துமோன் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு நண்பரின் வீட்டில் அவர் தங்கியிருப்பார் என நினைத்து அவரது பெற்றோரும் அதை கண்டுகொள்ளவில்லை.

போலீஸ் விசாரணை
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு மேலாகியும் பிந்துமோன் வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது செல்போனை ட்ரேஸ் செய்த போது அது திருவல்லா என்ற ஊருக்கு பக்கத்தில் தொடர்பு எல்லையில் இருந்து துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு பைபாஸ் சாலைக்கு அருகே உள்ள முட்புதரில் பிந்துமோனின் மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திடுக் தகவல்
இதையடுத்து, பிந்துமோன் விபத்தில் சிக்கியிருக்கலாம் என போலீஸார் கருதினர். அங்குள்ள மருத்துவமனைகளில் விபத்தில் சிக்கி அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். ஆனால், பிந்துமோன் என்ற பெயரில் யாரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குழப்பம் அடைந்த போலீஸார் பிந்துமோனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிந்துமோனுக்கும், அவரது அக்காள் கணவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, பிந்துமோனின் அக்காள் கணவர் முத்துக்குமாரின் வீட்டுக்குச் சென்ற போது வீடு பூட்டி இருந்தது.

'திரிஷ்யம்' பட பாணி..
இந்நிலையில், முத்துக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் உள்ளே சென்றனர். அப்போது ஒரு அறையில் மட்டும் புதிதாக தரைத்தளம் போடப்பட்டிருந்ததை போலீஸார் பார்த்தனர். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் போலீஸார் அந்த தரைத்தளத்தை தோண்டி பார்த்தனர். அப்போது சில அடிகள் தோண்டியதுமே துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பின்னர் 5 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த பிந்துமோனின் உடலை போலீஸார் வெளியே எடுத்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான முத்துக்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். சொத்து பிரச்ன இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திரிஷ்யம் மலையாள திரைப்படத்திலும், இளைஞர் ஒருவரை கொலை செய்து காவல் நிலையத்தின் தரையிலேயே புதைக்கும் காட்சிகள் வரும். தற்போது அதே பாணியில் கேரளாவில் ஒரு கொலை நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications