ஓரங்கட்டப்படும் சசி தரூர்?.. 'யாருக்கும் பயப்பட மாட்டேன், என்னைக் கண்டும் பயப்படாதீங்க' என பதில்
திருவனந்தபுரம்: கேரளாவில் சசி தரூர் மலபார் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்னைக் கண்டும் பயப்பட வேண்டாம் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் மல்லிகார்ஜூன கார்கேவை எதிர்த்து சசி தரூர் போட்டியிட்டார்.
எனினும், சசிதரூர் தோல்வி அடைந்தார். தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்தே சசி தரூருக்கு பெரிதாக நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இல்லாமலே இருந்தது.
ஓபிஎஸ் + சசி + டிடிவி.. அடித்து சொன்ன அமித் ஷா.. கொந்தளித்த எடப்பாடி! பிரச்சனை தொடங்கியது இங்குதான்?
நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்
காந்தி குடும்பத்தினரின் ஆதரவு வேட்பாளராக கட்சியினர் மத்தியில் மல்லிகார்ஜூன கார்கே நம்பப்பட்டதால் அவருக்கே பெரும்பாலான ஆதரவு இருந்தது. இதனால், எதிர்பார்த்தபடியே மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை கட்சித்தலைமை வெளியிட்டது.
சசி தரூர் பெயர் இல்லை
அதில், சசி தரூர் பெயர் இடம் பெறவில்லை. சசி தரூர் பெயரோடு காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்று முதன் முதலாக குரல் கொடுத்த ஜி 23 குழுவில் இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் பலரது பெயரும் இடம் பெறவில்லை. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம் பெறாதது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
சசி தரூர் அரசியல் பயணம்
இந்த நிலையில், கேரள காங்கிரசிஸ் கட்சியில் ஒரு பிரிவினர் மத்தியில் சசி தரூருக்கு எதிராக எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சசிதரூர் எம்.பி, "மலபார் சுற்றுப்பயணம்" என்னும் பெயரில் கேரளத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய யாத்திரை ஒன்றைத் தொடங்கியுள்ளார். முன்னதாக இதை முன்னிட்டு கோழிக்கோடு மாவட்ட இளைஞர் குழு சார்பில் 'மதச்சார்பின்மைக்கான சவால்களும்-சங்பரிவார் அமைப்புகளும்' என்னும் பெயரில் விவாத நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விவாத நிகழ்வு கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
சசிதரூரை ஓரம் கட்டும் முயற்சிகள்
பிறகு கோழிக்கோடு எம்.பி ராகவன் தலையிட்ட பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சசி தரூர் ஓரம் கட்டப்படவில்லை என்று கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகாரன் கூறியிருக்கிறார். ஆனாலும், கேரள காங்கிரஸ் கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் வைத்து பார்க்கும் போது சசிதரூரை ஓரம் கட்டும் முயற்சிகள் நடப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
நான் யாருக்கும் பயப்படமாட்டேன்
இந்த நிலையில், உங்களின் அரசியல் பயணத்தை பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் அச்சப்படுகின்றனரா? என்று சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சசி தரூர், ''நான் யாருக்கும் பயப்படமாட்டேன். அதேபோல, என்னைக் கண்டும் யாரும் அச்சப்பட தேவையில்லை" என்று பதிலளித்தார்.