அதானி வசம் சென்ற திருவனந்தபுரம் விமான நிலையம்.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்! கேரள அரசுக்கு பின்னடைவு
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பு அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பது சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கெனவே கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டபோது இதே கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் இதனை உறுதி செய்திருக்கிறது.
இந்த வழக்கில் கேரள அரசின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

விமான நிலையங்கள்
நாடு முழுவதும் 18 சர்வதேச விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவையனைத்தையும் 'ஏர்போா்ட் அத்தாரட்டி ஆஃப் இந்தியா' (AAI) எனும் பொதுத்துறை நிறுவனம்தான் பராமரித்து வருகிறது. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த பராமரிப்பு விவகாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. இதன் மூலம் போட்டி அதிகரித்து சிறபான சேவையை வழங்க முடியும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

அதானி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இனி பொதுத்துறை நிறுவனங்களுக்கு என பிரத்தியேகமான இடம் என எதுவும் கிடையாது. இந்நிறுவனங்கள் இருக்கும் இடத்திற்கு தனியார் துறையும் வரலாம்" என்று சமீபத்தில் கூறியிருந்தார். இவ்வாறு இருக்கையில், முதல் கட்டமாக 6 விமான நிலையங்களை 'அரசு-தனியார் கூட்டு முயற்சி' அடிப்படையில் டெண்டர் மூலம் தனியாருக்கு விடுவதாக அறிவித்தது. அதன்படி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.

வழக்கு
இதனை எதிர்த்து கடந்த 2020ல் கேரள உயர்நீதிமன்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு நாடியிருந்தது. ஆனால் அதானிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்வதாக கூறி கேரள அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கின் முக்கிய வாதங்கள்
இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங் இதில் வாதாடியுள்ளார். இந்த வழக்கின் முக்கிய வாதங்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலாவது வாதம் ஏலம் விடப்பட்டது. அதாவது விமான நிலையத்தை யார் குத்தகைக்கு எடுப்பது என ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேரள அரசு மற்றும் 6 நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. ஆனால் ஏலத்தில் அதானிக்கே இந்த பராமரிப்பு பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த ஏலத்தில் மாநில அரசையும், ஒரு தனியார் நிறுவனத்தையும் ஒரே தட்டில் வைத்து மத்திய அரசு பார்த்திருக்கிறது என்றும், பொதுவாக இம்மாதிரியான ஏலத்தில் மாநில அரசுகள் பங்கேற்றால் அந்த ஒப்பந்தம் மாநில அரசுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதுதான் முறை என சொல்லப்படுகிறது.

அனுபவம்
இரண்டாவதாக 'அனுபவம்'. அதாவது கேரள அரசு ஏற்கெனவே மூன்று விமான நிலையங்களை பராமரித்த வந்திருக்கிறது. இதில் 2 சர்வதேச விமான நிலையமும் அடங்கும். இவ்வாறு இருக்கையில் இந்த பராமரிப்பு பணியில் முன் அனுபவமே இல்லாத அதானி நிறுவனத்திற்கு ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று கேள்வியெழுப்பப்பட்டது. ஆனால் இந்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து கடைசியாக ஒரு வாதத்தை கேரள அரசு முன்வைத்தது.

நிலம்
அதாவது இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. விமான நிலையத்தை விரிவாக்க அரசு ஏற்கெனவே செலவு செய்திருக்கிறது. எனவே இந்த ஒப்பந்தத்தில் எங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இதையும் நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, "விமான நிலையத்தை 'ஏர்போா்ட் அத்தாரட்டி ஆஃப் இந்தியா' (AAI) பராமரித்தால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கும்.

தொழிற்சங்கங்கள்
ஆனால் இந்த பாராமரிப்பு பணிகள் தனியார் கைகளுக்கு சென்றுவிட்டால் பணி பாதுகாப்பு இருக்காது. உதாரணமாக AAI பராமரிப்பின் போது ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 58. ஆனால் தனியார் துறையில் இது 60 ஆக இருக்கும் என மேலும் பல ஒப்பீடுகளை தொழிற் சங்கங்கள் முன்வைத்தன. இவையனைத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. இறுதியாக அதானி இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லையென நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications