உயிரை காப்பாற்றிக்கச் சென்ற சூரல்மலை முகாமிலேயே நடந்த சோகம்! மண்ணில் புதைந்த "பள்ளி"! அலறும் வயநாடு
வயநாடு: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் என முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் சூரல்மலையில் ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த பள்ளியே நிலச்சரிவில் புதைந்துவிட்டதால் 42 பேர் உயிரிழந்துவிட்டனர்.
தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமடைந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையை கொடுத்து வருகிறது. அது போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

நான்ஸ்டாப் மழை: அந்த வகையில் கேரளாவில் சூரல்மலை பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் நேற்று காலை முதலே ஆங்காங்கே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல்வேறு கட்டடங்களை வெள்ள நீர் சூழ்ந்துக் கொண்டிருக்கிறது.
ஏராளமான வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அட்டமலையிலிருந்து முண்டகை வரையில் இருந்த ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
சூரல்மலையில் நிலச்சரிவு: இந்த நிலச்சரிவில் சூரல்மலை பகுதியில் 500- க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கியுள்ளன. இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. அது சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்டது. இந்த பள்ளிதான் நிவாரண முகாமாக செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு அருகே இருந்த வீடுகள், கடைகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கின.
இதில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் நிலத்தில் அப்படியே புதைந்துவிட்டனர். அவர்களை மீட்கும் பணிகளை கேரள பேரிடர் மீட்பு பணியினர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பூமிக்கடியில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் மோப்ப நாய் பிரிவை அழைத்து வந்து உள்ளே ஏதாவது சடலங்கள் இருக்கின்றனவா என்பதை சோதனை செய்ய உள்ளனர்.
இடைவிடாமல் பெய்து வரும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அது போல் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் வயநாடு சென்றுள்ளன. அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு படையினர் வயநாட்டிற்கு சென்றுள்ளனர். முண்டக்கையில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சுல்தான் பத்தேரியில் உள்ள செயிண்ட் மேரி கல்லூரியில் உள்ள ஹெலிபேடிற்கு கொண்டு வரப்படுவார்கள்.
ஆற்றில் மூழ்கிய மக்கள்: முகாமில் இருந்து உடல்கள் பிணவறைக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது போல் இந்த நிலச்சரிவால் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும் பகுதி என சொல்லப்படுகிறது.
இந்த நிலச்சரிவு குறித்து நேற்று முதலே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் வருவாய் துறையினரும் வயநாட்டில் நிலச்சரிவுக்குள்ளாகும் பகுதியில் இருப்பவர்களை மீட்டு சூரல்மலையில் உள்ள பள்ளியில் தங்க வைத்திருந்தனர். ஆனால் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்ட போது அந்த பள்ளியே சரிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட் அலர்ட்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய கேரளாவிலிருந்து வடக்கு கேரளா வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணனூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது போல் எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கண்ணனூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 10 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications