சரிதா போட்ட கணக்கு.. பிஎஸ்என்எல் ஊழியரின் 76 லட்சம் பணம்.. போலீஸையே மிரள வைத்த ஸ்கெட்ச்
திருவனந்தபுரம்: கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கொல்லத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரிக்கு அங்கு வேலை செய்த பெண் அதிகாரி சரிதாவால் என்ன ஆனது என்பது குறித்தும், அவர் கூலிப்படை மூலம் என்ன செய்தார் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்..
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்த 80 வயதாகும் பாப்பச்சன், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். கோட்ட பொறியாளர் ஆவார். பாப்பச்சன் ஓய்வு காலத்தில், தனது மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து, கொல்லம் ஆஸ்ராமம் பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவருக்கு ஓய்வு பெற்ற போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்த கிடைத்த ரூ.76 லட்சத்தை கொல்லத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த மே 26-ந் தேதி ஆஸ்ராமம் பகுதியில் பாப்பச்சன் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. விபத்தில் காயமடைந்த பாப்பச்சன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படுகாயம் அடைந்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கொல்லம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். அத்துடன் காரை ஓட்டி வந்த கொல்லத்தை சேர்ந்த அனிமோனை போலீசார் கைது செய்தனர். முதலில் விபத்து என்றே இந்த விவகாரத்தை போலீசார் அணுகியுள்ளனர். ஆனால் அவரது மகள் தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றுவந்த பின்னர் தான் முறைகேடு விவகாரம் தெரியவந்துள்ளது.
கொல்லத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பாப்பச்சன் தனது ஓய்வுகால பணத்தை முதலீடு செய்திருந்தது, அவரது மகளுக்கு அப்போது தான் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் நிதி நிறுவனத்திற்கு சென்று விசாரித்துள்ளார். பாப்பச்சன் ரூ.76 லட்சம் முதலீடு செய்திருந்ததும், அதில் ரூ.40 லட்சத்தை நிதி நிறுவன மேலாளரான சரிதா (42) எடுத்து இருந்ததும், இதுதொடர்பாக பாப்பச்சனுக்கும், சரிதாவுக்கும் பிரச்சினை இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த பாப்பச்சனின் மகள் கொல்லம் மாநகர போலீஸ் கமிஷனர் விவேக்குமாரியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், கொல்லம் கிழக்கு போலீசார் மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பாப்பச்சன் விபத்தில் இறக்கவில்லை என்பதும், முதலீட்டு பணத்தை அபகரிக்க சரிதா திட்டமிட்டு ஆட்களை ஏவி காரை ஏற்றி கொலை செய்ததும் தெரியவந்தது.
பாப்பச்சனின் பணத்தில் ரூ.40 லட்சம் வரையிலும் தனியார் நிறுவன அதிகாரி சரிதா போலி ஆவணங்கள் தயாரித்து எடுத்துள்ளார். இது பாப்பச்சனுக்கு தெரியவந்துள்ளது. அவர் போலீசாரிடம் புகார் அளித்து விடுவார் என சரிதா ஒரு கட்டத்தில் பயந்துள்ளார்.அதன்பின்னர் விபத்து போல் செட்டப் செய்து பாப்பச்சனை கொலை செய்ததுடன். மீதி பணத்தை அபகரிக்கவும் சரிதா திட்டமிட்டார். இதற்காக அவர் கொல்லத்தைச் சேர்ந்த கூலிப்படையை ஏவி கொலையும் செய்து உள்ளார். இதுதொடர்பாக சரிதா, அனிமோன், அனூப் (37), மாகின் (47), ஹர்ஷிம் அலி (27) ஆகிய 5 ேபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications