மழை காலம் வந்தாச்சு.. குடும்பம், நண்பர்களோடு புதுச்சேரி போங்க! நிறைய என்ஜாய் பண்ணலாம் -என்ன ஸ்பெஷல்?
சென்னை: மழைக்காலத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடம் எது என்று தேடிக்கொண்டு இருப்பவர்களா நீங்கள்? இருக்கவே இருக்கு நம்ம புதுச்சேரி. அங்குள்ள சிறப்புகள் என்ன? எந்தெந்த பகுதிகளுக்கு எல்லாம் செல்லலாம் என்று விரிவாக பார்ப்போம்.
கடற்கரைகள்: புதுச்சேரியில் பஃரோம் பீச், பேரடைஸ் பீச் ஆகியவை மழைக்காலத்தில் ஒரு வித்தியாசமான அழகையையும் உணர்வையும் தருபவை. இந்த கடற்கரைகளின் அலைகள் பொதுவாக உயரமாக எழும். இங்குள்ள காட்சிகள் பசுமையானதாகவும் கண்களை குளிர்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும். இந்த கடற்கரைக்கு வரும் பலர் நீண்ட தூரம் நடைப்பயணம் மேற்கொள்வதையும் அல்லது கடல் அலைகளின் ஒலியைப் பாராட்டிக்கொண்டே கடற்கரையில் அமர்ந்து இருப்பதை விரும்புகிறார்கள்.

படகு சவாரி: புதுச்சேரியைச் சுற்றி உப்பங்கழி எனப்படும் பேக் வாட்டர்கள் மழைக்காலத்தில் மிக அழகாக இருக்கும். சுண்ணாம்பு பாறை படகு வீடு மற்றும் அவுஸ்டேரி ஏரி போன்ற இடங்களில் படகு சவாரி செய்வது, பரிசல் சவாரி செய்வது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.

ஆரோவில்: புதுச்சேரி அருகே உள்ள ஒரு சர்வதேச டவுன்ஷிப்பாக பார்க்கப்படுகிறது அவுரோவில்லில் உள்ள மத்ரிமந்தர். அழகிய தோட்டங்கள் மற்றும் பசுமையால் சூழப்பட்டு உள்ள ரம்மியமான பகுதி இது. இந்த பகுதியும் மழைக்காலத்தில் கூடுதல் அழகுடன் காட்சியளிக்கும். இதன் காரணமாக அமைதியான மற்றும் அழகிய இடமாகவும், சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமாகவும் தெரிகிறது.

கபே மற்றும் உணவகங்கள்: பிரென்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியின் எப்படி அந்நாட்டின் சுவடுகள் தெரியுமோ அதேபோன்று ஐரோப்பாவைபோல கபே கலாச்சாரம் உள்ளது. அழகிய கட்டமைப்புடன், மனதிற்கு இதம் தரும் கபேக்கள் இங்கு அதிகம். ஜில்லென்ற மழைக்காலத்தில், ஒரு சூடான காபி அல்லது தேநீர் அருந்தி மழையை ரசிப்பது பலருக்கு இதமான அனுபவமாக இருக்கும்.
பிரெஞ்சு காலனி: பிரான்சுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் செல்ல வேண்டுமா? புதுச்சேரியின் பிரெஞ்சு காலனிக்கு செல்லுங்கள். காலனித்துவ காலத்தின் கட்டிடக்கலை, மரங்களால் சூழப்பட்ட நிழல் நிறைந்த தெருக்கள் உங்கள் மனதை சாந்தப்படுத்தும். மழை காலத்தில் குளிர்ச்சியுடன் கவர்ச்சியான அழகும் நிறைந்து இருக்கும். இந்த தெருக்களில் நடந்து வருவதே மனதிற்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகும். இந்த பகுதியில் உள்ள பொடீக்குகள், கலை அருங்காட்சியகங்களில் நேரத்தை செலவிடலாம்.

ஆயுர்வேத ஸ்பா: புதுச்சேரியில் உள்ள ஏராளமான ரிசார்ட்கள் மற்றும் நல்வாழ்வு மையங்களில் ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் மசாஜ்கள் வழங்கப்படுகின்றன. மழைக்காலத்தில் ஏற்படும் குளிரால் தசை பிடிப்புகள் போன்றவை ஏற்படும். அவர்களுக்கு இந்த மசாஜுகள், ஆயுர்வேத சிகிச்சைகள் பயனளிக்கும். மனதை புத்துணர்ச்சி அடைய செய்யவும் இது சிறந்த வழியாகவும் இருக்கும்.
கோவில்கள் மற்றும் தேவாலயங்கள்: புதுச்சேரியில் அழகிய கோவில்களும் தேவாலயங்களும் உள்ளன. அருள்மிகு மணக்குல விநாயகர் கோயில், புனித இதய இயேசுவின் பேராலயம் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம்.
புகைப்படம்: மழைக் காலத்தில் நிலவும் புதுச்சேரியின் பசுமை, மழையில் நனைந்து ஈரமாக காட்சி தரும் அழகிய வீதிகள் மற்றும் பிரெஞ்சு கட்டிடக் கலையுடன் கட்டப்பட்ட கட்டிடங்களில் பூசப்பட்டு இருக்கும் பளிச் பளிச் நிறங்கள் மழைக்காலத்தில் புகைப்படக்காரர்களுக்கு சொர்க்கமாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications