தென்காசி அருகே துப்பாக்கிச்சூடு.. போலீஸ் எஸ்.ஐ-யை தாக்கிய ’கள்’ வியாபாரி சுட்டு பிடிப்பு.. ஆலங்குளத்தில் பரபரப்பு
தென்காசி: தென்காசி அருகே ஆலங்குளத்தில் கள் வியாபாரி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கள் இறக்கியதை தடுக்க முயன்ற சப் இன்பெக்டரை தாக்கியதால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 முறை துப்பாக்கியால் சுட்டதில் கள் வியாபாரி மணிகண்டன் என்பவரது காலில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து படுகாயம் அடைந்த கள் வியாபாரி மற்றும் தலையில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.

கள் வியாபாரம் செய்ததாக..
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தற்போது பதனீர் சீசன் நடந்து வருகிறது. இதனால் பனைகளில் இருந்து பதனீர் இறக்கப்படுகிறது. ஒரு சிலர் கள் இறக்கி வியாபாரம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து மருதம்புத்தூர் அருகே உள்ள பனைக்காட்டில் சோதனை நடத்தினார்.
அப்போது கள் வியாபாரி மணிகண்டன் என்பவர் பனையில் இருந்து இறங்கிகொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை கீழே இறங்கி பானையை காண்பிக்கும் படி கூறியிருக்கிறார்கள். அப்போது அந்த பானையில் பதனீர் இருந்தது. எனினும் பனைமரத்தில் கட்டியிருந்த மற்றொரு பானையில் கள் இருந்தது தெரியவந்தது.
துப்பாக்கியால் சுட்ட போலீசார்
போலீசார் கள் இருப்பதை கண்டுபிடித்ததும் அங்கிருந்து மணிகண்டன் தப்ப முயன்றுள்ளார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசார் மற்றும் மணிகண்டன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து தப்பி செல்ல மட்டை, கம்பு உள்ளிட்டவற்றால் போலீஸ்காரரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தான் தற்காப்பிற்காக போலீசார் மணிகண்டன் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதில் காலில் குண்டு பாய்ந்தது. மொத்தம் 4 முறை துப்பாக்கியால் சுட்டனர் என்றும் இதில் மணிகண்டன் காலில் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து படுகாயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலமாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications