15 இடங்களில் சதமடித்த வெயில்.. ஈரோட்டில் 107 டிகிரி பாரன்ஹீட்! “நாளை நல்ல செய்தி” வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், இன்று மாநிலம் முழுவதும் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதம்தான் கோடைக்காலம் தொடங்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரியிலேயே கோடை தொடங்கிவிட்டது. இதனால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடலோரப் பகுதிகளில் 91- 98 டிகிரி பாரன்ஹீட் வரையும், மலைப்பகுதிகளில் 71-86 டிகிரி பாரன்ஹீட் வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரியும், கரூர் பரமத்தியில் 104 டிகிரி வரையும் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் இன்று, 107 டிகிரியாக வெயில் பதிவாகியுள்ளது.

அதாவது, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரியும், சேலம் மற்றும் திருப்பத்தூரில் 106.8 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 106.3 டிகிரியும், நாமக்கல்லில் 105.8, திருச்சி, தருமபுரியில் 105.2, திருத்தனியில் 104.7, தஞ்சாவூர், கரூர் பரமத்தியில் 104, மதுரை விமான நிலையம் 103.6, கோவை, 103.2, சென்னை மீனம்பாக்கம் 102.2, மதுரை நகரில் 101.4, பாளையங்கோட்டையில் 100 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.
வெயில் தாக்குதல் ஒருபுறம் இருக்க நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பது பொதுமக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று தமிழகம், புதுவை நிலவக்கூடும். மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். நாளையும், நாளை மறுதினமும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.10 மற்றும் ஏப்.11ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இன்று முதல் ஏப்.11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 104 - 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் வரை இருக்கும். உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 100-104 டிகிரி பாரன்ஹீட் வரையும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 93-98 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் இருக்கக்கூடும். நாளை தொடங்கி ஏப்.11 வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° - 3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
ஈரபதத்தை பொறுத்த அளவில், அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications