படுத்தும் வெயிலுக்கு பிரேக்.. தமிழகத்தில் மழை கொட்டும்.. எங்கு தெரியுமா? லிஸ்டில் சென்னை இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்குப் பரவலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக தக்கலை (கன்னியாகுமரி) 50 மிமீ மழை பெய்துள்ளது.

வெப்பம்: அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரைத் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° - 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 42.0° செல்சியஸ், சேலத்தில் 41.6° செல்சியஸ், வேலூரில் 41.5° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில் 40.5° செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.9° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழை இருக்கு: மேலும் அடுத்து வரும் நாட்கள் குறித்த வானிலை செய்திக்குறிப்பில், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 30) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மே 1 முதல் மே 3 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 4 மற்றும் 5 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பம் எந்தளவு அதிகரிக்கும்: அடுத்த ஐந்து தினங்களுக்குத் தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல மே 1 முதல் மே 3 வரையிலான நாட்களில் வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும், ஏப்ரல் 4 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். ஏப்ரல் 3ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications