ஆந்திராவை அலற விடப் போகும் ’மொந்தா’.. முக்கிய ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்! வெளியான அறிவிப்பு!
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'மொந்தா' புயல் தீவிர புயலாக தீவிரமடைந்து, இன்று மாலை ஆந்திர மாநில காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மொந்தா புயல் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்து ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் கடந்த 26ஆம் தேதி இரவு உருவான 'மொந்தா' புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தில் நேற்று நிலை கொண்டது. இன்று அது தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில், காற்று வேகம் 90 முதல் 110 கிலோமீட்டர் வரை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவின் பல மாவட்டங்களில் மழை தொடங்கி விட்டது. தமிழகத்திலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலையும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மொந்தா புயல்
இந்நிலையில், மொந்தா புயலின் தாக்கத்தால் ரயில்வே துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஆந்திரா, ஒடிசா வழியாகச் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களுக்கு புறப்படும் சில முக்கிய ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ரயில் சேவை மாற்றம்
அதன்படி, சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842) - முதலில் காலை 7 மணிக்கு புறப்பட இருந்தது, இப்போது இரவு 11.30 மணிக்கு புறப்படும். சென்னை-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் (22870) - காலை 10 மணிக்கு பதிலாக இரவு 11.50 மணிக்கு புறப்படும். விழுப்புரம்-கரக்பூர் எக்ஸ்பிரஸ் (22604) - காலை 11.05 மணிக்கு பதிலாக மாலை 7 மணிக்கு புறப்படும்.
சென்னை-ஹவுரா மெயில்
சென்னை-ஹவுரா மெயில் (12840) - மாலை 7 மணிக்கு பதிலாக இரவு 10.40 மணிக்கு புறப்படும். திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் (12664) - மதியம் 1.35 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும். புயல் காரணமாக ரயில் பயணிகள் தங்களின் பயண அட்டவணையை சரிபார்த்து, பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
ரயில் பயணிகள்
'மொந்தா' புயல் இன்று மாலை ஆந்திரக் கடற்கரையைத் தாக்கும் நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. ரயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் முன்கூட்டியே தகவல் அறிந்து தங்கள் பயண திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications