மிரட்டும் மழை.. புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: தொடர் மழை காரணமாக புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே புழல் ஏரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழையை போல வடகிழக்கு பருவமழையும் ஏறத்தாழ இயல்பான அளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. எனவே ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

“திருவள்ளூர் அருகே பொன்னேரி பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 21.20 அடி. முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். இந்த நிலையில் புதன்கிழமை நீர் இருப்பு 19.25 அடியாகவும், கொள்ளளவு 2,862 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழையினால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது நீர் வரத்து விநாடிக்கு 570 கன அடியாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 200 கனஅடி உபரி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் புழல் ஏரிக்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும். எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேபோல செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது வந்தது. தற்போது ஏரிக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications