கும்மிடிப்பூண்டியில் வெளுத்துக் கட்டிய மழை.. அதிகபட்சமாக 10 செ.மீ. மழைப் பதிவு
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லையில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இங்குள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக கும்மிடிபூண்டியில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. பொன்னேரியில் 9 செமீ, தாமரைப்பாக்கத்தில் 6 செமீ, ஊத்துக்கோட்டையில் 5 செமீ, பூண்டி, திருவள்ளூர், சோழவரம் பகுதியில் 4 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. இதேபோல, சென்னையிலும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.
நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடி மற்றும் மின்னலுடன் கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் அதீத மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மின்னல் காரணமாக இரவு நேரம் பகல்போலக் காட்சியளித்தது. அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 6.1 செ.மீ மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 5.3 செமீட்டரும், நந்தனத்தில் 4.7 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 4.2 செ.மீ மழையும் பெய்தது. இதனால் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி கடல்போலக் காட்சியளிக்கிறது.
மழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கோண்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மழை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்: 044 25619207, 044 25619204, 04425619206.












Click it and Unblock the Notifications