வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்! முதல் மாவட்டமாக நெல்லை உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நெல்லை: கனமழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் இன்றைய தினம் முதல் மாவட்டமாக நெல்லைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை இன்றுடன் விலகி, இன்று முதல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்து வந்தது.

தற்போது அந்த மழையின் அளவு காலை முதல் தீவிரமடைந்துள்ளது. இன்று நெல்லை மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நெல்லை, அம்பாசமுத்திரம், பாபநாசம், சேரமாதேவி, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.16) விடுமுறை அறிவித்து ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் நள்ளிரவு 2 மணி முதல் 5 மணி வரை கனமழை பெய்து வந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் 6 மணி அளவில் விட்ட மழை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் ஆட்சியர் இளம்பகவத்.
நெல்லை, தூத்துக்குடியை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கமல் கிஷோர் பிறப்பித்தார். மேலும் ராமநாதபுரத்திலும் கனமழை கொட்டி வருவதால் அந்த மாவட்டங்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை அறிவித்தார் ஆட்சியர் சிம்ரான்ஜித் சிங்.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள நிலையில் முதல் மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications