கோடையில் ஜில்ஜில் கிளைமேட்.. 2 நாட்களுக்கு நல்ல மழை காத்திருக்கு.. குஷி செய்தியை சொன்ன வெதர்மேன்
சென்னை: கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில், தென்தமிழகத்தில் அடுத்து இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்தது. இருப்பினும், அதன் பிறகு வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. பருவமழை நின்ற உடனேயே வெப்பம் உச்சத்திற்குச் சென்றது.

வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரம் சமயத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை பிப். மாதமே தமிழகத்தில் சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.
வெப்ப அலை: வெப்பம் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மதிய நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு தரப்பில் எச்சரிக்கும் அளவுக்குக் கூட வெப்பம் மோசமாக இருந்தது. பல்வேறு இடங்களில் வெப்ப அலையும் தொடர்ச்சியாக வீசியது.
இந்தச் சூழலில் தான் கோடை வெயிலில் இருந்து கொஞ்சம் பிரேக் விடுக்கும் வகையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையால் வெப்பம் குறைவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று இரவு (மே 4) முதல் நாளை (மே 5) மாலை வரை தென் தமிழகக் கடற்கரை (குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி), கேரளா, லட்சதீவு, மேற்கு மற்றும் தென் இலங்கைக் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 5 ஆம் தேதி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். மீனவர்கள் மற்றும் கடற்கரைக்குச் செல்வோர் 5ம் தேதி இரவு வரை கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தென்தமிழகத்தில் மழை: தமிழ்நாட்டில் கடந்த பருவமழை சீசனில் டிச. இறுதியில் தென் தமிழகத்தில் அதி தீவிர கனமழை கொட்டியது. அப்போது புயல் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் கனமழை கொட்டியது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மழை மோசமாக இருந்தது. பல பகுதிகளில் மழை நீர் சில அடிகள் வரை நின்ற நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வரும் மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 7ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications