ஆறப் போட்டு அடிக்கும் வெயில்..தமிழகத்தில் ஒரு வாரம் ’ஹாட்’ தான்! மறந்தும் ‘இதை’ செய்யாதீங்க மக்களே.!
சென்னை: தமிழகத்தில் இன்று அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும், நாளையும், நாளை மறுநாளும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஓரளவு கை கொடுத்தது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து டிசம்பர் ஜனவரி மாதங்களில் மழைக்கு விடை கொடுத்து உறை பனி ஆரம்பித்தது.

அதே நேரத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. பகல் நேரங்களில் கடுமையான வெயில், இரவு நேரத்தில் பனிப்பொழிவு என மாறிய காலநிலையால் மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.
குறிப்பாக ஈரோடு, கரூர், ராமநாதபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு வெப்பநிலை பதிவானது. கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் வெயில் அதிகரித்து இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதற்கிடையே வெயிலுக்கு விடை கொடுக்கும் விதமாக வளிமண்டல சுழற்சி உருவானது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. பெரிய அளவு மழை இல்லை என்றாலும் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தை குறைப்பது போல மழை இருந்தது. மார்ச் 11 தேதி முதல் 18ஆம் தேதி வரை ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் 13ம் தேதியே மழை விடை பெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி பதினாறாம் தேதி வரை தமிழக மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் எனவும், 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுமை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
குறிப்பாக 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். 18ம் தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக் கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 14ம் தேதி தொடங்கி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக் கூடும். 18 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக் கூடும்.
இன்று அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, வடதமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். அதேபோல 16 மற்றும் 17ம் தேதி அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்." என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக எனவே, பொதுமக்கள் இந்த காலப் பகுதியில் தேவையற்ற வெளி பயணங்களை தவிர்த்து, போதிய தண்ணீர் அருந்தி, உடல் நலத்தை பேண வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications