துபாய், பக்ரைன், தோஹா, ரியாத்தில் மீண்டும் வெளுக்க போகும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
சென்னை: துபாய், பக்ரைன், தோஹா, ரியாத் போன்ற பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துபாய், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்க்காத பெருமழை கடந்த ஏப்ரல் 15, 16ம் தேதிகளில் பார்த்தார்கள். பாலைவனத்தில் புயல்களை பார்த்த அவர்கள், பெருமழை மற்றும் காட்டாற்று வெள்ளதை முதல் முறையாக கண்டனர். பெருமழை மற்றும் வெள்ளத்தால் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

துபாய் விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகே நிலைமை சீரானத.துபாயின் வடக்கு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் கடுமையாக இருந்ததால் காரில் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.. ஓமனில் பெய்த கனமழையால் சுமார் 19 பேர் பலியாகினார்கள்.
துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது மிகவும் வறண்ட பிரதேசம் ஆகும். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையே பெய்யும். ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்யும். இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் 16ம் தேதி ஒரே நாளில் 25 செமீ மழை பெய்தது. மோசமான காலநிலை மாற்றத்தால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கின. வாகனங்கள் பல மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட. சமூக ஊடகங்களில் துபாயின் வெள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீரென இப்படி மழை பெய்தற்கு அரேபிய தீபகற்பம் வழியாகச் சென்ற ஒரு பெரிய புயலே காரணம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் அப்போது கூறியது. அதேநேரம் செயற்கை மழை பெய்ய வைக்க நடந்த முயற்சி தான் விபரீதமாக மாறியது என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.
இந்நிலையில் துபாய், பக்ரைன், தோஹா, ரியாத் போன்ற பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மே 2ம்தேதி துபாய், அபுதாபி, மற்றும் ஷார்ஜா பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், மே 1ம் தேதி பக்ரைனில் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார். இதேபோல் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் தோஹா மற்றும் ரியாதில் கனமழை பெய்யும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications