இன்னைக்கு ஜில் கிளைமேட் தான்.. இந்த 11 மாவட்டங்களில் நைட் முழுக்க வெளுக்க போகுது மழை- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், வெயில் தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதேநேரம் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழையும் தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. இது கோடை வெப்பத்தைக் குறைக்கப் பெரியளவில் உதவுகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி நட்சத்திரம் வேறு நெருங்கும் நிலையில், மாநிலத்தில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் மக்களால் பகல் நேரங்களில் வெளியே செல்வதே பெரும் சிரமமாக இருக்கிறது. அதிலும் சென்னை போன்ற கடலோர நகரங்களில் காற்றின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ள அசவுகரியம் அதிகரித்து வருகிறது.

11 மாவட்டங்களில் மழை
அதேநேரம் மாலை நேரங்களில் மாநிலத்தில் சில இடங்களில் ஓரளவுக்கு மழை பெய்கிறது. இன்று கூட கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் மதியம் நல்ல மழை பெய்தது. வடதமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்திருந்தது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்த மாவட்டங்கள்
அதாவது இரவு 10 மணி வரை திருப்பூர், திண்டுக்கல், கரூர், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வரும் நிலையில், இந்த மழை வெப்பத்தைக் குறைப்பதாக அமைந்துள்ளது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று (மே 1) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிளைமேட்
நாளை (மே 2) தொடங்கி மே மாதம் 3ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மே 4 மற்றும் 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும். மற்ற இடங்களிலும், புதுவை மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மே 6 மற்றும் 7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications