விடாது மழை.. சென்னையில் இன்றும் கனமழை தொடருமாம்! வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்றும் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் "தமிழ்நாடு வெதர்மேன்" பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை வெயில் மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெளியில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இன்றும் சென்னையில் பரவலாக மழை பெய்யும். அதேபோல உள் தமிழகத்திலும் நல்ல மழை பெய்யும். கன்னியாகுமரியில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆழியாறு, அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும்.
இன்றும் நாளையும் சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். கன்னியாகுமரியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
கத்திவாக்கம் - 32 மி.மி
காஞ்சிபுரம் - 20 மி.மி
பொன்னேரி - 19 மி.மி
மாதவரம் - 18 மி.மி
எண்ணூர் - 12 மி.மி
மணலி - 12 மி.மி
திருவள்ளூர் - 12 மி.மி
கொளத்தூர் - 10 மி.மி
அடையார் - 10 மி.மி
மகாபலிபுரம் - 10 மி.மி
தாமரைப்பாக்கம் - 10 மி.மி
அளவில் மழை பெய்திருக்கிறது என்று கூறியுள்ளார். முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்" என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் "இன்று தென் மேற்கை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. நாளை மறுநாள் வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிஷா, மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும்; காற்றழுத்தத் தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி வராது என்றாலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications