Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக அரசு வாங்குன கடன் இருக்கட்டும்! செலவு போக 2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? அன்புமணி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025&ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவாக ரூ. 1 லட்சத்து 66,754 கோடியை மட்டுமே செய்திருக்கிறது. இதன் மூலம் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டும் தான் கடன் வாங்கியதாக திமுக அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது.

anbumani tamil nadu borrowings

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன்களை வாங்கிக் குவித்தது திமுக அரசு தான். இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952&ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020&21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.73 லட்சம் கோடி ஆகும். இதற்கு திமுக அரசின் திறனற்ற நிதி நிர்வாகம் தான். இதை கடந்த காலங்களில் பலமுறை புள்ளி விவரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி வந்திருக்கிறது.

ஆனால், திமுக அரசு வீணாக கடன் வாங்கவில்லை என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன்களை வாங்கியதாகவும் விளக்கமளித்த ஆட்சியாளர்கள், வாங்கிய கடன் முழுவதும் முதலீடுகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறி வந்தனர். அது அப்பட்டமான பொய் என்பது இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. 2021&ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற திமுக அரசு 2025&ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.3.86 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இந்தத் தொகையை மூலதன செலவுகளுக்காக மட்டுமே திமுக அரசு பயன்படுத்தியிருந்தால், ரூ.3.86 லட்சம் கோடி மதிப்புள்ள கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2021&22ஆம் ஆண்டில் ரூ.37,011 கோடி, 2022&23ஆம் ஆண்டில் ரூ.39,530 கோடி, 2023&24ஆம் ஆண்டில் ரூ.42,532 கோடி, 2024&25ஆம் ஆண்டில் ரூ.47,681 கோடி என மொத்தம் ரூ.1.66 லட்சம் கோடி மட்டுமே மூலதன செலவுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளம் என்னவென்றால், அரசின் வருவாய் செலவுகள் அனைத்தையும் வருவாய் வரவுகளுக்குள் கட்டுப்படுத்தி, மூலதன செலவுகளுக்கு மட்டும் கடன் வாங்குவது தான். அப்படியானால் மூலதன செலவுகளுக்கான ரூ.1.66 லட்சம் கோடிக்கும் கூடுதலாக வாங்கப்பட்ட ரூ.2.20 லட்சம் கோடி கடன் என்ன ஆனது? இந்த புள்ளிவிவரங்களையெல்லாம் நான் தயாரிக்கவில்லை. எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு 15.90% வளர்ச்சி அடைந்து விட்டது என்று திமுகவினர் மார்தட்டுகிறார்களோ, அதே ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தான் திமுகவின் இந்த அவலத்தையும் காட்டுகின்றன.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், வரும் மார்ச் 31&ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள ஐந்தாண்டுகளில் திமுக அரசு ரூ. 4 லட்சத்து 73,299 கோடி கடன் வாங்கியுள்ளது. இதே காலத்தில் திமுக அரசு செய்த மூலதன செலவுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 23,984 கோடி மட்டுமே. மீதமுள்ள ரூ.2.49 லட்சம் கோடி எங்கே போனது? என்ற வினா இயல்பாகவே எழுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கடனாக வாங்கியத் தொகையில் 43.11% தொகையை மட்டும் தான் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காக செலவிட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.2.20 லட்சம் கோடி கடன் தொகையை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக திமுக செலவிட்டுள்ளது.

கடனாக வாங்கியத் தொகை மூலதன செலவுகளுக்காக பயன்படுத்தப்படாததற்கு காரணம் திமுக அரசின் நிதிநிர்வாகத் தோல்வி தான். ஆட்சிக்கு வந்தால் வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரி ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதை சாதிப்பதில் படுதோல்வி அடைந்து விட்டது. கடந்த ஆண்டில் கூட ரூ.49,279 கோடி வருவாய்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1.77 லட்சம் கோடி வருவாய்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், இலவசங்களை வழங்குதல் போன்ற வழக்கமான வருவாய் செலவுகளுக்குக் கூட பொருளீட்ட முடியாத திமுக அரசு, அவற்றையெல்லாம் கடன் வாங்கித் தான் செய்திருக்கிறது. அதனால் தான் வாங்கிய கடனை திமுக அரசால் சொத்துகளாக மாற்ற முடியவில்லை.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட வளர்ந்து விட்டோம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, நிதி நிர்வாகத்தில் உத்தரப்பிரதேச அரசிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று விமர்சிக்கப்படும் உத்தரப்பிரதேச அரசு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2.57 லட்சம் கோடி மட்டுமே கடனாக வாங்கியுள்ளது. இதை விட 50% அதிகமாக தமிழகம் கடன் வாங்கியுள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4.65 லட்சம் கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய கடனை விட ரூ.2.08 லட்சம் கோடி அதிகமாக உத்தரப்பிரதேசம் மூலதன செலவு செய்துள்ளது. அதற்கு காரணம் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் வரவுகளுக்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, ரூ.2.15 லட்சம் கோடியை மிச்சப்படுத்தி வருவாய் உபரியை ஏற்படுத்தியது தான். உத்தரப் பிரதேசத்திடம் நிதிநிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய திமுக அரசு, தமிழகத்தின் வரிப் பணம் உத்தரப்பிரதேசத்திற்கு செல்வது தான் இதற்கு காரணம் என அடிமுட்டாள்தனமான பொய்யை கூறுகிறது.

திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களின் விளைவாக நடப்பாண்டில் வட்டியாக மட்டும் ரூ.70,754 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் திமுக செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. மோசமான நிதி நிர்வாகத்தால் தங்களை அடகு வைத்திருக்கும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+