வாய் இருக்குதேன்னு உளறுன்னா... இப்படித்தான் செரியன் பிலிப் மாதிரி மாட்டிப்போம்!
திருவனந்தபுரம்: காங்கிரஸ் பெண் தொண்டர்களைக் கேவலப்படுத்தும் வகையில் பேசி கமெண்ட் அடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் இப்போது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார்.
ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர் ஏ.கே.ஆண்டனிக்கு நெருக்கமாக இருந்தவர் செரியன் பிலிப். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதுதான் புயலைக் கிளப்பியுள்ளது. அதில் அவர் கூறுகையில், திருச்சூரில் சில இளைஞர் காங்கிரஸார் தேர்தலில் டிக்கெட் மறுக்கப்பட்டதை எதிர்த்து சட்டையைக் கழற்றி போராட்டம் நடத்தியுள்ளனர். நல்ல போராட்டம்தான். இதை நிச்சயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். உண்மையில், சில பெண் காங்கிரஸார், ரகசியமாக இதை செய்து சீட் வாங்கி விடுகின்றனர் என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் பெண்களை, பொதுவாக பெண்களை மிகவும் கேவலப்படுத்தி விட்டார் செரியன் என்று பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து செரியன் விளக்குகையில், நான் பெண்களை மதிப்பவன். பெண்களை நான் தவறாகப் பேசவில்லை. பெண்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆண்களைத்தன் நான் சாடியுள்ளேன் என்று விளக்கியுள்ளார்.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் கூறுகையில், செரியன் உடனடியாக மக்களிடமும், பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது பேச்சு மிகவும் அநாகரீகமானது என்றார் அவர்..
மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் பிந்து கிருஷ்ணா, ஷனிமோல் உஸ்மான் ஆகிோயர் கூறுகையில், இது பெண்களை அவமதிக்கும் பேச்சு. இதுதொடர்பாக அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.