நித்தியானந்தாவிடம் நடத்தப்பட்ட ஆண்மைப் பரிசோதனை... 31 பக்க அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!
பெங்களூர்: பலாத்கார வழக்கில் சாமியார் நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட, 31 பக்க ஆண்மை பரிசோதனை அறிக்கை முடிவுகளை சிஐடி போலீசார் இன்று கோர்ட்டில் சமர்ப்பித்தார்கள்.
முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின்போது தான் ஒரு ஆண்மகன் இல்லை, குழந்தையின் உடல்தான் தனக்கு உள்ளது என்று தெரிவித்தார் நித்தியானந்தா. எனவே அவர் ஆண்தானா, அல்லது ஆண் அளவுக்கு அவர் வளர்ச்சியடையவில்லையா என்பதை சோதித்து பார்க்க கோர்ட் முடிவு செய்தது.
இதையடுத்து நித்தியானந்தா சாமியாரிடம் செப்டம்பர் 8ம்தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி போலீசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனை
விக்டோரியா மருத்துவமனை தலைவர் துர்க்கண்ணா தலைமையில் 6 பேர் கொண்ட டாக்டர் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது. ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளுக்கு நித்தியானந்தா உள்ளானார்.
ஒத்துழைப்பு தரவில்லை
அதே நேரம் விந்தணு பரிசோதனை போன்றவற்றை செய்ய முயன்றபோது, தனக்கு நெஞ்சுவலி இருப்பதால், சுய இன்பம் செய்தால் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறி டாக்டர்களுக்கு நித்தியானந்தா ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார்.
குரல் சோதனை
இதன்பிறகு மடிவாளா பகுதியிலுள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் அவரது குரல் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை அறிக்கையை சிஐடி போலீசாரிடம் டாக்டர்கள் குழு அம்மாத இறுதியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆனால் அறிக்கையில் எந்த டாக்டர் கையெழுத்திடுவது என்பதில் ஏற்பட்ட இழுபறியால் அறிக்கையை அளிப்பதிலும் காலதாமதம் ஆனது.
டாக்டர்களுக்குள் சர்ச்சை
சோதனை அறிக்கையில் கையெழுத்திடும் டாக்டர்கள், நித்தியானந்தாவுடனான வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்ற அச்சத்தால் டாக்டர்கள் கையெழுத்திட மறுத்துவந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இறுதியில், துர்க்கண்ணா உட்பட அனைத்து டாக்டர்களும் கையெழுத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இன்று தாக்கல்..
டாக்டர்கள் குழு அளித்துள்ள அறிக்கையை, சிஐடி போலீசார், இன்று ராம்நகர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை 31 பக்கம் கொண்டதாக இருந்தது. ஆனால் மூடப்பட்ட கவரில் வைத்து இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உடனடியாக தெரியவரவில்லை. விசாரணையையொட்டி விசாணைக்கு ஆஜராவதற்காக நித்தியானந்தா சாமியார், ராம்நகர் கோர்ட்டிற்கு வந்தார். பக்தர்கள் புடைசூழ பாதுகாப்பாக கோர்ட் வளாகத்திற்குள் அவர் சென்றார்.
கைதாக வாய்ப்பு?
குரல் பரிசோதனை மற்றும் ஆண்மை பரிசோதனையின்போது, நித்தியானந்தா, உடலுறவு கொள்ள தகுதியான ஆண்மகன்தான் என்பது தெரியவந்தால், வழக்கில் அவருக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக இந்த சோதனை மாறும். இதையடுத்து அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.