ட்ரம்ப் அழைப்பு... அமெரிக்கா செல்கிறார் மோடி!
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் மோடி, டிரம்புடன் 26-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி 3 தடவை தொலைபேசியில் பேசி இருக்கிறார். ஆனால், நேரடி சந்திப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்கிறார்.
மோடியின் அமெரிக்கப் பயணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஜூன் 25 மற்றும் 26-ந் தேதிகளில் அவர் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு 26-ந் தேதி, டொனால்டு டிரம்புடன் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-அமெரிக்கா நலன் சார்ந்த பிரச்சினைகள், எச்1பி விசா, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.