தொடரும் பதிலடி: பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்!
பைசலாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கில் 4 தீவிரவாதிகள் நேற்று தூக்கிலிடப்பட்டனர். பெஷாவர் தாக்குதலுக்குப் பின்னர் 6 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்க தீவிரவாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 148 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தூக்கு தண்டனை மீதான தடையை பாகிஸ்தான் அதிரடியாக ரத்து செய்தார். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டு அறிவித்தார் நவாஸ் ஷெரீப்.
இந்த அறிவிப்பையடுத்து பாகிஸ்தான் முழுவதும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 3 ஆயிரம் தீவிரவாதிகளை 48 மணிநேரத்தில் தூக்கிலிட வேண்டும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி கோரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் அதிபரும் தம் பங்குக்கு தம் முன் நிலுவையில் இருந்த தீவிரவாதிகளின் கருணை மனுக்களை அடுத்தடுத்து நிராகரித்தார்.
இந்நிலையில் 2009-ம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையிடத்தை தாக்கிய அகீல் என்கிற டாக்டர் உஸ்மான், 2003-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தாக்குதல் நடத்திய அர்ஷத் முகமது ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று பைசலாபாத் சிறையில் தூக்கில் போடப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை கொல்லும் நோக்கில் கடந்த 2003-ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் நடத்திய வழக்கில் ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த அக்லாஸ் அஹமது(எ) ரூஸி, குலாம் சர்வார், ஜுபைர் அஹமது, ரஷித் டிப்பு ஆகிய 4 பேரும் நேற்று அதே பைசலாபாத் சிறைக்குள் தூக்கிலிடப்பட்டனர்.
இதில் அக்லாஸ் அஹமது(எ) ரூஸி ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாட்டு குடியுரிமை பெற்றிருந்தவன். இதனால் இவனை தூக்கிலிட வேண்டாம் என்று ரஷ்யா முறைப்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பாகிஸ்தான் இதனை நிராகரித்து தூக்கிலிட்டது.
இதே பைசலாபாத் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 30 தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் அடுத்தடுத்த நாட்களில் தூக்கிலிடப்படக் கூடும் என்று தெரிகிறது.