சிரியாவில் ஷியா முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி
டமாஸ்கஸ்: சிரியாவில் ஷியா முஸ்லீம்களின் வழிபாட்டுத் தலத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ளது செய்யிதா ஜெயினப் என்ற ஷியா முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலம். உலக ஷியா முஸ்லீம்கள் இந்த தலத்தை புனிதமான இடமாக கருதுகிறார்கள்.
இந்நிலையில் சனிக்கிழமை ஒரு காரில் வந்த 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்த வழிபாட்டுத் தலத்தின் வாயிலில் தங்களின் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 20 பேர் பலியாகியுள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலை இரண்டு அல்ல மாறாக 3 பேர் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த வழிபாட்டுத்தலத்தை அரசுக்கு ஆதரவான படைகள் பாதுகாத்து வந்தாலும் அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 7 பேர் பலியாகினர், 12 பேர் காயம் அடைந்தனர். அதற்கும் முன்பு பிப்ரவரி மாதம்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 134 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.