சொந்த பங்களாவில் சொகுசாக வாழும் ஏழைப்பங்காளனே!... ஜெயக்குமாருக்கு எதிராக அதகள போஸ்டர்கள்!
சென்னை ராயபுரம் மற்றும் வடசென்னை தொகுதி அதிமுகவினர் சார்பாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக அவரின் சொந்த தொகுதி முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் அம்மா அணியைச் சேர்ந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும், ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் சபாநாயகரான ஜெயகுமாருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்புடன் நிதியமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜெயகுமார் முதன்முதலில் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.
பேச்சு ஒத்திவைப்பு
அப்போது நேரமின்மை காரணமாக விறுவிறுப்பாக வாசிப்பதாக சில நிமிடங்கள் வாசித்து பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அமைச்சர் ஜெயகுமார், ஓ.பன்னீர்செல்வம் தான் ட்ரம்ப்பையே ஜெயிக்க வைத்ததாகக் கூறுவார் என்று தனது பேட்டியில் கூறியதால் அதிமுகவின் இரு அணிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்ததது தள்ளிப் போனது.
சுருதியை குறைத்த ஜெயக்குமார்
இதனையடுத்து தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் ஜெயகுமார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வாங்கிய டோஸ் காரணமாக அடுத்தது எப்போது பேட்டி கொடுத்தாலும் எல்லா மீடியாக்களிடமும் பன்னீர் அணியை விமர்சிக்காமல், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஒரே போடாக போட்டு வருகிறார் ஜெயக்குமார்.
போஸ்டர்கள்
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக ராயபுரம் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் எதிர்ப்பு போஸ்டர்கள் அமர்க்களப்படுகின்றன. 'சொந்த பங்களாவில் சகல வசதிகளுடன் வசித்து வரும் ஏழைப்பங்களானே!... சொந்த மகனை சசிகலா உதவியால் எம்.பியாக்க உன்னால்...உனக்காக 26 ஆண்டுகளாக உழைத்த எந்த மீனவ மக்களை உயர்த்தியுள்ளாய்?" என்று கேள்வி எழுப்பும் வகையிலான வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
யாரு பார்த்த வேலை
வடசென்னை தெற்கு மற்றும் ராயபுரம் அதிமுகவினர் என்று தெள்ளத்தெளிவாக பெயர் அச்சிடப்பட்டு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர் ஒட்டியவர்கள் எந்த அணி என்ற தேடுதலில் இறங்கியுள்ளது அதிமுக.