ஆவின் பார்லரில் பீர் பாட்டில்கள்.. கடைக்காரருக்கே ஷாக்கிங்!
வேலூர் ஆவின் பாலகத்தில் பீர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: ஆவின் பாலகத்தில் பீர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பீர் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை டாஸ்மாக் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக சரக்கை வாங்கும் சிலர் அதனை அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். அங்குள்ள ஆவின் பாலகத்தில் பாலின் தரம் குறித்து ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் 12 பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பீர் பாட்டில்கள் குறித்து கடை விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினர்.
அதற்கு அவர், ஒரு நபர் இங்கு வைத்துவிட்டு சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பீர் பாட்டில்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதி டாஸ்மாக் மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பீர் பாட்டில்கள் ஒப்படைப்பட்டன. ஆவின் பாலகத்தில் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.